வீட்டிலிருந்தவர்களை வெளியேற்றி... மனிதாபிமானத்தோடு தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள்!
பாட்னா: பீகாரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு யாருக்கும் காயமேற்படா வண்ணம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர் மாவோயிஸ்டுகள்.
பீகாரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் மாவோயிஸ்டுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள மஞ்சவுலி கிராமத்தை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கேதர் நாத் சிங் என்பவரது வீட்டை மாவோயிஸ்டுகள் சுற்றி வளைத்தனர்.
அந்த வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்க்க முடிவு செய்த மாவோயிஸ்டுகள், முன்னெச்சரிக்கையாக அந்த வீட்டிலிருந்த இன்ஸ்பெக்டர் குடும்பத்தினரை முதலில் வெளியேற்றினர்.
பின்பு வீட்டின் மீது வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், வீடு பலத்த சேதமடைந்தது. எனினும், இந்தத் தாக்குதலில் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவுரங்காபாத் போலீஸ் சூப்பிரெண்டு உபேந்தர் குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications