‛மெச்சூரிட்டி இல்லை’.. மருமகனிடம் பொறுப்புகளை பறித்த மாயாவதி! அரசியல் வாரிசு இல்லை எனவும் அறிவிப்பு
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ள மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை கடந்த ஆண்டு இறுதியில் அரசியல் வாரிசாக அறிவித்தார். இந்நிலையில் தான் ஆகாஷ் ஆனந்துக்கு மெச்சூரிட்டி இல்லை எனக்கூறி அந்த அறிவிப்பை இன்று திடீரென்று மாயாவதி திரும்ப பெற்றதோடு, தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆகாஷ் ஆனந்தை விலக்கி வைப்பதாக அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி. தலித் தலைவராக அறியப்படும் இவர் பகுஜன் சமாஜ் கட்சியை நடத்தி வருகிறார். நடந்து வரும் லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் + சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியில் அவர் இடம்பெறவில்லை.

மாறாக லோக்சபா தேர்தலில் தனித்து வேட்பாளர்களை களமிறக்கி உள்ளார். மாயாவதிக்கு தற்போது 67 வயது ஆகிறது. இதனால் அவரால் தீவிரமாக அரசியலில் ஈடுபடுவதில் சிரமம் உள்ளது. இருப்பினும் முக்கிய நிகழ்வுகளில் மாயாவதி பங்கேற்று வருகிறார்.
மாயாவதி திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இறுதியில் மாயாவதி தனக்கு பிறகு கட்சியை வழிநடத்தும் அரசியல் தலைவரை அடையாளப்படுத்தி அரசியல் வாரிசாக அறிவித்தார். அதன்படி தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாயாவதி அறிவித்தார்.
ஆகாஷ் ஆனந்த் என்பவர் மாயாவதியின் தம்பி ஆனந்த் குமாரின் மகன் ஆவார். தற்போது ஆகாஷ் ஆனந்த்துக்கு 31 வயது ஆகிறது. இவர் கடந்த 2016ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக செயல்பட தொடங்கினார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக செயல்பட்டார். மேலும் பாதயாத்திரை உள்பட கட்சியை வளர்க்கும் பணியில் அவர் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில் மாயாவதி இந்த அறிவிப்பை செய்தார்.
இதற்கிடையே தான் மாயாவதியின் இந்த அறிவிப்பு என்பது கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக பேச்சுக்கள் எழுந்தன. இத்தகைய சூழலில் தான் தற்போது உத்தர பிரதேசத்தில் 3 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தகைய சூழலில் தான் மாயாவதி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், எனத அரசியல் வாரிசாகவும் ஆகாஷ் ஆனந்தை நான் அறிவித்தேன். ஆனால் கட்சியின் நலன் கருதியும், அவர் மெச்சூரிட்டி அடையும் வரையும் இரு பொறுப்புகளில் இருந்தும் அவர் விலக்கி வைக்கப்படுகிறார்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications