குப்பை நகரான பெங்களூரை சுத்தமான நகராக்க போராடும் 77 வயது முதியவர்: நீங்களும் உதவலாமே!
பெங்களூர்: குப்பை நகரமாக மாறியுள்ள பெங்களூரை சுத்தமான நகராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பெங்களூரைச் சேர்ந்த 77 வயது முதியவர்.
பெங்களூரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகரில் தனது மனைவி இந்திராவுடன் (69) வசித்து வருபவர் பத்ரிநாத் விட்டல்(77). ஐஐடி மும்பையில் படித்த அவர் மைசூரில் உள்ள என்.ஐ.இ.யில் சிவில் என்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பிறகு பெங்களூரில் செட்டிலான அவர் ஓரிடத்தில் முடங்கிவிடவில்லை. பூங்கா நகரமான பெங்களூர் குப்பை நகரமாக ஆகிவிட்டது அவருக்கு கவலை அளித்தது. இது குறித்து அவர் பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து பேசியும் பலனில்லை. இதையடுத்து அவர் பொதுமக்களை நாடிச் சென்றார்.

இது குறித்து அவர் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
சிலர் என்னை உதாசினப்படுத்தினர். சிலர் என்னை பிச்சைக்காரன் போன்று நடத்தினர். ஆனால் பெங்களூரை சுத்தமாக்குவது குறித்து பலர் ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது. குப்பைகளை கொட்டுவதால் ஏற்படும் விபரீதங்கள் பற்றி மக்களுக்கு தெரியவில்லை. மக்கும், மக்காத குப்பை என பிரித்து கொடுக்குமாறு கூறினாலும் மக்கள் அதை கேட்க தயாராக இல்லை. அரசு தீவிர நடவடிக்கை எடுக்காமல் இது குறித்து ஒன்றும் செய்ய முடியாது.
நகரை சுத்தமாக்குவது குறித்து அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கும் கடிதத்தில் நான் 1,500 பேரிடம் கையெழுத்து வாங்கினேன். ஆனால் அதை பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து தான் change.org மூலம் ஆன்லைனில் மக்களிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்தேன். 50 ஆயிரம் பேர் கையெழுத்து போடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
ஏராளமானோர் கையெழுத்து போட்ட பிறகு அந்த கோரிக்கை கடிதத்தை நான் கர்நாடக முதல்வரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications