தமிழகம் எதிர்த்தாலும் காவிரிக்கு குறுக்கே அணை கட்டுவது உறுதி: கர்நாடக முதல்வர் திட்டவட்டம்
பெங்களூரு: காவிரி ஆற்றுக்கு குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் இரு அணைகளை கட்டும் முடிவில் எந்த மாற்றமும் கிடையாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்தார்.

பெங்களூருவில் இன்று நடைபெற்ற முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா அதன்பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: நடுவர்மன்ற தீர்ப்பு படி, காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய 192 டிஎம்சி நீரை அளித்துவிட்டு எஞ்சிய நீரை பயன்படுத்த கர்நாடகாவுக்கு எந்த தடையும் கிடையாது. இதில் தமிழகம் தலையிட முடியாது.
மேக்கேதாட்டு பகுதியில் இரு அணைகளை கட்டி குடிநீர் மற்றும் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது அநாவசியமானது. கர்நாடகா புதிய அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது.
கர்நாடகா புதிய அணை கட்டுவதால் தமிழகத்துக்கு செல்லும் நீரின் அளவு குறைந்துவிடாது. எனவே தமிழகம் எதிர்த்தாலும் அணை கட்டும் முடிவில் கர்நாடகா பின்வாங்காது. விவசாயிகள் கலங்க வேண்டாம். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார். மேலும் தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கையும் கர்நாடகா சந்திக்கும் என்றும் சித்தராமையா கூறினார்.












Click it and Unblock the Notifications