சிறுமியை சீரழித்த சிறுவன் கைது - பிஞ்சில் பழுக்கும் சிறார்கள் கருகும் சிறுமிகள்
நாடு முழுவதும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு ஆளாகி வருகின்றனர். பள்ளி படிக்கும் சிறுவர்களே பால்மணம் மாறாத பச்சிளம் சிறுமிகளை சீரழிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
டேராடூன்: பள்ளிப்படிப்பை கூட தாண்டாத மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்கின்றனர். இவர்கள் காம இச்சைக்கு பலியாவது பால்மணம் மாறாத 4 வயது சிறுமிகள் என்பதுதான் கொடூரத்தின் உச்சம்.
பஞ்சாபில் சங்கத் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் பக்கத்து வீட்டில் வசித்த 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். எட்டாம் வகுப்பு மட்டுமே படித்து வரும் அந்த சிறுவன் இந்த கொடூர செயலை செய்த சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளான். இந்த அதிர்வலைகள் ஓயும் முன்பாக டேராடூனில் 11 வயது சிறுவன் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமியை விளையாடுவதற்காக அழைத்து வந்த அந்த சிறுவன் நீண்ட நேரமாக வீட்டிற்கு அனுப்பவில்லை. சந்தேகப்பட்ட அந்த சிறுமியின் தாயார், சிறுவன் வீட்டிற்கு வந்து பார்த்த போது அதிர்ந்து போனார். சிறுமியை பலாத்காரம் செய்த அந்த சிறுவன், பயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளான். அவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தனது மகளுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து போலீசில் புகார் அளிக்கவே, சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த கொடூர சம்பவம் போலவே டேராடூனிலும் 4 வயது சிறுமி பக்கத்து வீட்டில் வசிக்கும் 11 வயது சிறுவனால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியையும், பலாத்காரம் செய்த சிறுவனையும் குழந்தைகள் நல மருத்துவர்களிடம் ஆலோசனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். நடந்த சம்பவங்களையும் வாக்குமூலங்களையும் பதிவு செய்து காவல்நிலையத்திலும் பெற்றோர்களிடமும் அவர்கள் ஒப்படைப்பார்கள்.
சிறுவர்களும் பிஞ்சில் பழுத்து விடுகிறார்கள் காரணம் இணையதளங்களிலும் செல்போனிலும் வரும் ஆபாச வீடியோக்களை எளிதில் அவர்கள் பார்க்க நேரிடுகிறது. அசிங்கமான அந்த செயலை பக்கத்து வீட்டு சிறுமிகளை சீரழிக்க பயன்படுத்துகின்றனர். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை கண்காணிப்புடன் பார்த்துக்கொள்வது அவசியம். சிறுமிகளை மட்டுமல்ல சிறுவர்களையும் கண்காணிக்க வேண்டியது தங்களின் கடமை என்பதை பெற்றோர்கள் உணரவேண்டும்.