12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாய்மாமன் உள்ளிட்ட 2 உறவினர்கள்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் 12 வயது சிறுமி தாய்மாமன் உள்பட உறவினர்கள் இரண்டு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 12 வயது சிறுமி ஒருவர் தனது தாய்மாமாவின் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவரை அவரின் தாய்மாமா பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி உத்தர பிரதேச மாநிலம் இடாவாவில் உள்ள ஷங்கர் என்ற உறவினரின் வீட்டிற்கு சென்று தங்கினார்.
ஏற்கனவே தாய்மாமா செய்த காரியத்தால் அதிர்ச்சியில் இருந்த சிறுமியை அந்த உறவினரும் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் பயந்து போன சிறுமி அங்கிருந்தும் கிளம்பி ஜெய்பூர் வந்தார்.
எங்கு போவது என்று தெரியாமல் இருந்த அவர் ஜெய்பூரில் உள்ள சிசு கிரா என்ற காப்பகத்தில் சேர்ந்தார். அங்கு அவர் மூன்று மாதங்களாக இருந்தும் தனக்கு நேர்ந்தது பற்றி யாரிடமும் கூறவில்லை. அதன் பிறகு தான் அங்குள்ள பெண்கள் கமிட்டியினரிடம் அவர் தன்னை உறவினர்கள் 2 பேர் பலாத்காரம் செய்ததை தெரிவித்தார்.
இதையடுத்து சிசு கிராவில் உள்ளவர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.