பேசிக்கொண்டிருக்கும் போது துண்டிக்கப்படும் செல்போன் அழைப்பு... உடனடியாக தீர்க்க பிரதமர் மோடி உத்தரவு
டெல்லி : பேசிக்கொண்டிருக்கும் போது அழைப்பு திடீரென துண்டிக்கப்படும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்றும். இந்த பிரச்சினை இணையதள தொடர்புக்கும் பரவிடக் கூடாது என்றும் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
செல்போன் அழைப்புகள், பேசிக் கொண்டிருக்கும்போதே பாதியில் தொடர்பு அறுந்து விடும் பிரச்சினை, கடந்த 3 மாதங்களாக நிலவி வருகிறது. இதனால், செல்போன் சேவை நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆனால், கதிர்வீச்சு அபாயம், ஸ்பெக்ட்ரம் பற்றாக்குறையால் நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் செல்போன் கோபுரங்கள் மூடப்பட்டதே அழைப்பு துண்டிக்கப்படுவதற்கு காரணம் என்று சேவை நிறுவனங்கள் கூறி வருகின்றன.
இந்நிலையில், இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி நேற்று உயர்மட்ட கூட்டத்தை கூட்டி விவாதித்தார். இப்பிரச்சினை, சாதாரண மக்களை நேரடியாக பாதிப்பதாக கூறி, அவர் கவலை தெரிவித்தார்.
இதற்கு தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கேட்டறிந்த அவர், விரைவில் செல்போன் அழைப்பு துண்டிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அழைப்பு துண்டிக்கப்படும் பிரச்சினை, இணையதள தொடர்புக்கும் பரவாமல் நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications