"தங்கமகன்" மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி: மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாராஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் புதன்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 18-ந்தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

தங்கம் வென்ற மாரியப்பன்
இந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 4,300 வீரர், வீராங்கனைகள் 23 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார்.

வெண்கலம் வென்ற வருண்சிங்
அவருடன் பாடி வருண் சிங் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தையும் வென்றார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் எதுவும் வெல்லவில்லை.

சேலத்தை சேர்ந்தவர்..
ஆனால் பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு. மாரியப்பன் தங்கவேலு தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்தவர்.

விபத்தில் காலை இழந்தவர்..
விபத்து ஒன்றில் காலை இழந்த நிலையிலும் சோர்ந்து போகாமால் இந்த சரித்திர சாதனை படைத்துள்ளார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்த வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
மோடி வாழ்த்து
பிரதமர் மோடி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வாழ்த்தை வெளியிட்டிருக்கிறார். அதில், பதக்கம் வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள மாரியப்பன் தங்கவேலு, வருண்சிங் ஆகியோருக்கு பாராட்டு என கூறியுள்ளார் பிரதமர் மோடி.











Click it and Unblock the Notifications