மோடிக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு... திரிணாமுல் காங். எம்.பி திடுக் குற்றச்சாட்டு
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடிக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. இட்ரிஸ் அலி திடுக்கும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்துக்குள் ஊடுருவி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்திய அதிர்வலைகள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை... அதற்குள்ளாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. இட்ரிஸ் அலி பிரதமர் மோடியை பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய இட்ரிஸ் அலி, பிரதமர் மோடிக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக நினைக்கிறேன்... அதனால்தான் பயங்கரவாதிகள் பதன்கோட் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். அதுவும் பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு போய்விட்டு வந்த பின்னர் நடந்துள்ளது... இது என்னுடைய சொந்த கருத்து என்றார்.
ஆனால் இட்ரிஸ் அலியின் கருத்தை நிராகரித்துள்ள திரிணாமுல் மூத்த தலைவர் டெரெட் ஓ பிரெய்ன், இட்ரிஸின் கருத்து ஆரோக்கியமானது அல்ல.. இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.