வரி பயங்கரவாதம் எனும் சுனாமி... மோடி மேட் டிஸாஸ்டர்.. ராகுலின் மெச்சூர்ட் 'அட்டாக்'
ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார் ராகுல் காந்தி.
டெல்லி: வரி பயங்கரவாதம் எனும் சுனாமியை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார் பிரதமர் மோடி; அவருக்கு அகன்ற மார்பு இருந்தாலும் இதயம் என்னவோ சிறியதுதான் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் ராகுல் காந்தி பேசியதாவது;
நாட்டின் பொருளாதாரத்தையே படுகொலை செய்துவிட்டார் பிரதமர் மோடி. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை என்பது படுதோல்வி அடைந்துவிட்டது.
வரி பயங்கரவாதம் எனும் சுனாமியை பிரதமர் மோடி கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது நிச்சயம் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றங்களை செய்வோம்.

சிறு வணிகர்கள்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு வணிகர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த ஒரு ஆலோசனையுமே நடத்தாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டது.

கவலைப்படாத அரசு
சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களைப் பற்றி மோடி அரசு கவலைப்படவே இல்லை. சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களால்தான் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வலியை காதுகொடுத்து கேட்க மோடி அரசு தயாராக இல்லை.

சின்ன இதயம்
இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு. குறிப்பாக மோடி மேட் டிஸாஸ்டர் என்றுதான் சொல்ல வேண்டும். உங்களுக்கு அகன்ற மார்பு இருக்கிறது... ஆனால் இதயம் சிறியதாகவே உள்ளது.

குடிமக்கள் திருடர்களா?
இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை என்பது செத்துப் போய்விட்டது. இந்த நாட்டின் குடிமகன்களை திருடர்களைப் போக அணுகுகிறது மத்திய அரசு.

மிகப் பெரிய பேரழிவு
அனைத்து பணமுமே கருப்புப் பணம் அல்ல.. கருப்பாக இருப்பது அனைத்தும் பணமும் அல்ல. எந்த ஒரு அடிப்படை புரிதலுமே இல்லாமல் இந்த நாட்டின் குடிமக்களை கொடூரமாக சித்ரவதை செய்து வருகிறார் பிரதமர் மோடி. வேலைவாய்ப்பின்மை என்பது மிகப் பெரிய பேரழிவை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications