கலாம் மறைவுக்கு ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..
டெல்லி : அப்துல் கலாம் மறைவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். கருத்தரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அப்துல் கலாம் காலமானார். அவரது மறைவு செய்து அறிந்த ஒட்டு மொத்த இந்தியாவே அதிர்ந்துள்ளது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி நாட்டின் அனைத்து பகுதிக்கும் சொந்தக்காரர் கலாம் என்றும், அவர் ஒரு தொழில் நுட்ப ஆளுமைத் திறன் மிக்கவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதே போன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி இளைஞர்களை வழி நடத்திய சகாப்தம் ஓய்ந்து விட்டதாக கூறியுள்ளார்.
மக்களிடம், இளைஞர்களிடம் நெருங்கியிருப்பதையே கலாம் பெரிதும் விரும்புவார் என்றும், தனது இறுதி காலங்களை தான் விரும்பும் மாணவர்களுடன் செலவிட்டவர் கலாம் எனவும் மோடி கூறியுள்ளார்.
தனது எண்ணங்களில் கலாமுடன் பழகி பழைய நினைவுகள் நிறைந்திருப்பதாகவும், அவருடன் உரையாடும் போது, பல விஷங்களை தாம் கற்றுக் கொண்டதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
மிகச் சிறந்த விஞ்ஞானியை, சிறந்த முன்னாள் குடியரசுத் தலைவரை இழந்ததில் இந்த நாடே துக்கத்தில் ஆழ்ந்துள்ளதாகவும், பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் சிங் ராஜ்நாத் சிங் தனது இரங்கல் செய்தியில், கலாம் காலமானது மிகவும் துக்கமான செய்தி என்றும், அவர் அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தவர் எனவும் கூறியுள்ளார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும் ராஜ்நாத் கூறியுள்ளார்.
மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லீ தனது ட்விட்டரில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் நாடு மிகச் சிறந்த குடிமகனை இழந்து விட்டதாகவும், அவரது ஆன்மா சாந்தியடை பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
இதே போன்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங், பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா, அத்வானி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கட்சிகளைக் கடந்து அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட் திரையுலகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், சமூக வலைதளங்களில் அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரது புகழை பதிவு செய்து வருகின்றனர்.