எப்ப பார்த்தாலும் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாரே மோடி: ராகுல் காந்தி
பாட்னா: பிரதமர் மோடியின் ரூ.15 லட்சம் சூட் பற்றி நான் விமர்சித்த பிறகே அவர் சூட் அணிவதை நிறுத்தியுள்ளார் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அங்கு பிரச்சாரம் செய்து வருகின்றார். அவர் ஷேக்புரா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,
ஓராண்டுக்கு முன்பு மோடிஜி தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் உங்களுக்கு எல்லாம் நினைவில் இருக்கும். கருப்பு பணத்தை மீட்போம், அனைத்து இந்தியர்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடுவோம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்பது உள்பட அவர் பல வாக்குறுதிகளை அளித்தார்.
தயவு செய்து கூறுங்கள், யாராவது ஒருத்தரின் வங்கி கணக்கிலாவது ரூ.15 லட்சம் உள்ளதா என்று. அவர் ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. அவர் தன்னுடைய கார்பரேட் நண்பர்களுக்கு தான் ஆதரவு அளிக்கிறார். மோடி ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிவிட்டது. அவர் நினைத்து இருந்தால் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்தை எப்பொழுதோ அளித்திருக்க முடியுமே.
மோடிஜி எப்பொழுது பார்த்தாலும் உலக நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால் அவர் ஒரு நாள் கூட விவசாயி அல்லது வேலையில்லா வாலிபர்களுடன் இருந்தது இல்லை.
மோடியின் ரூ.15 லட்சம் சூட் பற்றி நான் விமர்சித்தேன். அதில் இருந்து அவர் சூட் அணிவது இல்லை. சூட்பூட் போட்டவர்கள் தான் அவரை சுற்றியுள்ளனர். அவர்கள் தான் அறிவாளிகள் என்று அவர் நினைக்கிறார். மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 16 முறை உடை மாற்றியுள்ளார் என்றார்.