தேவகவுடா குஜராத்துக்கு வரலாம்.. குமாரசாமியைவிட நன்றாக பார்த்துக் கொள்வேன்: மோடி
சிக்மகளூர்: நான் பிரதமரானால் கர்நாடகாவை விட்டு வெளியேறப் போவதாக தெரிவித்திருக்கும் முன்னாள் பிரதமர் தேவகவுடா, குஜராத் மாநிலத்துக்கு வந்துவிடலாம் என்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானால் நான் கர்நாடகாவை விட்டு வெளியேறிவிடுவேன்.. 272 இடங்களை பாரதிய ஜனதா பெற்று ஆட்சி அமைத்தால் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று விடுவேன் என்பது தேவகவுடாவின் பிரகடனம்.
கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் இன்று பிரசாரம் மேற்கொண்ட மோடி இதைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்தார். அப்போது, நான் பிரதமரானால் கர்நாடகத்தை விட்டு வெளியேறுவேன் என்று கூறியிருக்கிறார் தேவகவுடா. அவர் குஜராத்துக்கு மாநிலத்துக்கு வந்து குடியேறலாம்.
அவரை குஜராத் மாநில அரசு வரவேற்கிறது.. அவரது மகன் குமாரசாமியைவிட தேவகவுடாவை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன் என்றார்.