முலாயம் கட்சி தலைவரை காக்க வைக்கிறீங்க: போலீசாரை துடைப்பத்தால் அடித்த எஸ்எஸ்பி சஸ்பெண்ட்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவரை காக்க வைத்ததற்காக 3 போலீசாரை துடைப்பத்தால் அடித்த போலீஸ் உயர் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் போலீஸ் உயர் அதிகாரியான ராஜேஸ் மோதக்கை சந்தித்து பேச ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவர் ஹெச்.டி. ஹஸன் இன்று அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். அப்போது மோதக் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஹஸனை
காக்க வைத்தார்களாம். ஹஸன் வந்தது குறித்து உடனே மோதக்கிடம் அவர்கள் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த மோதக் பாதுகாப்பு பணியில் இருந்த 3 போலீசாரையும் துடைப்பத்தால் அடித்துள்ளார். உடனே அந்த 3 பேரும் இந்த சம்பவம்
குறித்து டிஐஜியிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களின் புகாரின்பேரில் மோதக் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் உயர் அதிகாரி 3 போலீசாரை துடைப்பத்தால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.