உள்ளாட்சி தேர்தல் தோல்வி எதிரொலி: படேல் சமூகத்தினர் மீதான வழக்குகளை வாபஸ் பெறும் குஜராத் அரசு!!
காந்திநகர்: உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து படேல் சமூகத்தினர் மீதான வழக்குகளை குஜராத் மாநில அரசு அடுத்தடுத்து தொடர்ந்து வாபஸ் பெற்று வருகிறது.
குஜராத்தில் முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த படேல்கள் தங்களது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது பெரும் வன்முறை வெடித்தது.

இப்போராட்டக் குழுவின் தலைவர் ஹர்திக் படேல் மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆயிரக்கணக்கான படேல் சமூகத்தினர் மீது பல நூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே அண்மையில் நடைபெற்ற குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுடன் படேல் சமூகத்தினர் கை கோர்த்து செயல்பட ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு படுதோல்வி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து படேல் சமூகத்தினர் மீதான வழக்குகளை திரும்ப பெற குஜராத் மாநில அரசு முடிவு செய்தது.
படேல் சமூகத்தினர் மீது மொத்தம் 457 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக 382 பேர் மீதான 74 வழக்குகளைத் திரும்பப் பெற சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஆனந்திபென் படேல் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மேலும் பல வழக்குகளையும் திரும்பப் பெற முதல்வர் ஆன்ந்திபென் உத்தரவிட்டுள்ளதாக மாநில அமைச்சர் நிதின் படேல் கூறியுள்ளார்.
இதன் மூலம் படேல் சமூகத்தினரின் அரசு மீதான அதிருப்தியை குறைக்க முடியும் என நம்புகிறது பா.ஜ.க.












Click it and Unblock the Notifications