கருப்பாக இருந்த 5 வயது வளர்ப்பு மகன்.. சிவப்பாக்க கல்லால் தேய்த்து சித்ரவதை செய்த ம.பி. ஆசிரியை!
வளர்ப்பு மகனை சிவப்பாக்க கல்லால் தேய்த்து சித்ரவதை செய்துள்ளார் மத்தியப்பிரதேச ஆசிரியை.
போபால்: மத்தியப்பிரதேசத்தில் கருப்பாக இருந்த தனது ஐந்து வயது வளர்ப்பு மகனை சிகப்பாக்க, ஆசிரியை ஒருவர் அச்சிறுவனை கல்லால் தேய்த்துக் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம் நிஷாத்புரா குழந்தைகள் உதவி மையத்திற்கு நேற்று பெண் ஒருவர் தொலைபேசி வாயிலாக புகார் ஒன்றை அளித்தார். அதில் தன் பெயர் சோபனா எனத் தெரிவித்த அவர், தனது சித்தி அவரது வளர்ப்பு மகனை கொடுமைப்படுத்துவதாக புகார் தெரிவித்தார்.

இந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அச்சிறுவனை மீட்டனர். உடல் முழுவதும் சிராய்ப்புகளால் காயமடைந்திருந்த அச்சிறுவன் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
போலீசாரின் விசாரணையில் அச்சிறுவனை, சோபனாவின் சித்தியான சுதா திவாரி என்ற ஆசிரியை உத்தரகாண்டில் உள்ள அனாதை இல்லத்தில் இருந்து தத்து எடுத்தது தெரிய வந்துள்ளது. சுதாவின் கணவர் தனியார் மருத்துவமனை ஊழியர் ஆவார்.
சிறுவனை தத்து எடுத்த நாள் முதல் அவன் கருப்பாக இருப்பதை குறையாக கருதி வருந்தியுள்ளார் சுதா. இதனால், அவனை சிவப்பாக்க பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டு வந்துள்ளார். அதன் ஒருகட்டமாகத் தான், கருப்பு நிறக் கல் ஒன்றைக் கொண்டு அச்சிறுவனின் உடல் முழுவதும் அவர் தேய்த்துள்ளார். இப்படிச் செய்தால் அச்சிறுவன் சிவந்த நிறமாக மாறி விடுவான் என சுதாவிற்கு அவரது தோழி ஒருவர் ஐடியா கொடுத்துள்ளார்.
ஆனால், இப்படிக் கல் கொண்டு தேய்த்ததால் அச்சிறுவனின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. இதனால் அச்சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அச்சிறுவனின் மீது பரிதாபப்பட்ட சோபனா, இது தொடர்பாக குழந்தைகள் உதவி மையத்திற்கு போன் மூலம் புகார் அளித்துள்ளார்.
'தான் எவ்வளவோ எடுத்துக் கூறியும், சிறுவனை சிவப்பாக்குவதாகக் கூறி தனது சித்தி பல்வேறு கொடுமைகளைத் தொடர்ந்து வந்ததால், வேறு வழியின்றி போலீசில் புகார் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது’ என சோபனா தெரிவித்துள்ளார்.
குழந்தையை தத்து கொடுக்கும் இல்லங்கள், தொடர்ந்து குழந்தையை தத்து எடுத்தவர்கள் எப்படிப் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதைக் கண்காணித்து வர வேண்டும் என்பது நடைமுறை. அதன்படி, சிறுவனை தத்துக் கொடுத்த இல்லமும், போன் வழியாக சுதாவுடன் பேசி வந்துள்ளனர். அதனால், நிஜத்தில் சுதா அச்சிறுவனைக் கொடுமைப்படுத்தியது அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே, இனி வரும் காலங்களில் தத்துக் கொடுத்த குழந்தைகளை நேரில் சென்று ஆய்வு நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட அனாதை இல்லம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications