பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக செய்தி.. நிருபரை உள்ளாடையுடன் நிற்க வைத்த போலீஸ்!.. வைரலாகும் போட்டோ
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக செய்தி சேகரிக்க சென்ற நிருபர் உள்ளிட்ட 8 பேரை போலீஸ்காரர் ஒருவர் ஆடைகளை நீக்கிவிட்டு உள்ளாடையுடன் நிற்க வைத்து துன்புறுத்திய காட்சிகள் வைரலாகி வருகின்றன.
பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் கேதார்நாத் சுக்லா மற்றும் அவரது மகன் குரு தத் சுக்லா ஆகியோரை போலி பேஸ்புக் ஐடி மூலம் நடிகர் நீரஜ் குந்தர் அவதூறு கருத்துகளை வெளியிட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து எம்எல்ஏவின் புகாரை அடுத்து நீரஜ் குந்தர் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து மத்திய பிரதேசத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் போராட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தை செய்தியாக்குவதற்காக செய்தியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர். அப்போது உள்ளூர் நிருபரும், யூடியூபருமான கனிஷ்கா திவாரி அந்த சம்பவத்தை கேமராமேனுடன் சென்று படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீஸார், கனிஷ்கா திவாரியையும் அவரது கேமராமேனையும் கைது செய்தனர்.

அத்துமீறல்
எதற்காக எங்களை கைது செய்கிறீர்கள் என திவாரி கேட்டதற்கு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் அத்துமீறி போராட்ட களத்தில் நுழைந்ததாகவும் பல்வேறு பிரிவுகளை போலீஸார் கூறினர். மேலும் எம்எல்ஏவுக்கு எதிராக தொடர்ந்து செய்திகளை ஏன் போட்டு வருகிறீர்கள் என போலீஸ்காரர் ஒருவர் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

8 பேர் கைது
நிருபர், கேமராமேன், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 8 பேரை கைது செய்த போலீஸார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று 18 மணி நேரம் கஸ்டடியில் வைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து திவாரி கூறுகையில் கடந்த 2 ஆம் தேதி இரவு 8 மணிக்கு எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

போலீஸார்
அங்கு மாலை 6 மணி வரை நிற்க வைத்திருந்தனர். எங்களை போலீஸார் துன்புறுத்தி தாக்கினர். மேலும் ஆடைகளை நீக்கக் கூறி உள்ளாடையுடன் நிற்க வைத்தனர். மேலும் நாங்கள் 8 பேரும் உள்ளாடைகளுடன் நின்ற புகைப்படத்தை அங்கிருந்த காவல் துறை பொறுப்பாளர் அபிஷேக் சிங் பரிஹார் எடுத்தார்.

அரை நிர்வாண போட்டோ
அவர் அந்த போட்டோவை வைரலாக்கினார். இது மனித உரிமை மீறல். இனியும் எம்எல்ஏவுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டால் உடம்பில் ஒரு துணி கூட இல்லாமல் ஓட வைத்து விடுவேன் என மிரட்டியதாகவும் திவாரி தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுஹானின் கவனத்திற்கு சென்றது. அவர் தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications