வரலாற்று சிறப்பு மிக்க முல்லைப் பெரியாறு அணை தீர்ப்பு.. கடந்து வந்த பாதை
டெல்லி: தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கையான முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு நீரை தேக்கலாம் என்பதை ஏற்று உச்சநீதிமன்றம் மகிழ்ச்சிதரத்தக்க தீர்ப்பை அளித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை அது கட்டத் தொடங்கிய காலம் முதலே எத்தனையோ இன்னல்களை எதிர்கொண்டு வந்துள்ளது. ஆங்கிலேயரான பென்னிகுவிக் தமது சொத்துகளையெல்லாம் விற்றே முல்லைப் பெரியாறு அணையை கட்டி முடித்தார்.
முல்லைப் பெரியாறு அணையானது கேரள மாநிலம் இடுக்கியில் 1887 முதல் 1895 வரையிலான காலக்கட்டத்தில் அணை கட்டப்பட்டது. அணை கேரள மாநிலத்தில் அமைந்திருந்தாலும் பராமரிப்பும் இயக்கமும் தமிழகத்தின் வசமே இருக்கிறது. இதற்கமையவே அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் தமிழகம் ஒப்பந்தம் போட்டிருந்தது.

5 தமிழக மாவட்டங்களின் வாழ்வாதாரம்
அணையின் கிழக்கு பகுதியில் உள்ள தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு நீர் ஆதாரத்தை தருவதற்காக பென்னிகுவிக்கால் இந்த அணை கட்டப்பட்டது.

குஜராத் துயரம்
ஆனால் 1979-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள மொர்பி அணை உடைந்து 1800 பேர் முதல் 25 ஆயிரம் பேர் வரை பலியாகினர். இந்த அணை உடைப்பு சம்பவம் உலகின் மிக மோசமான துயரமாக கின்னஸிலும் பதிவானது.

கேரளாவில் எதிரொலி
இதனைத்தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணை அருகே 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால், அணை உடையும் ஆபத்து உள்ளதாக கேரள புவிவியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

அணையின் நீர்மட்ட உயரத்தை குறைக்க பரிந்துரை
1979-ஆம் ஆண்டு நவம்பரில் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த மத்திய நீர் ஆணையம், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்ட உயரம் குறைக்கப்பட வேண்டும் எனவும், மேற்கொண்டு மராமத்துப் பணிகள் செய்யவும் உத்தரவிட்டது.

152 அடியில் இருந்து 142.2 அடி
இதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 152 அடியில் இருந்து 142.2 அடியாகவும், பின்னர் 136 அடியாகவும் குறைக்கப்பட்டு மராமத்துப் பணிகள் தமிழக அரசால் செய்யப்பட்டன.

கேரளா பிடிவாதம்
ஆனால்மராமத்துப் பணிகள் நிறைவடைந்த பின்னரும் அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயத்த கேரளா அனுமதிக்கவில்லை. இதனால் 142 அடி உயர்த்த அனுமதி கேட்டு, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

2006-ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 2006-ஆம் ஆண்டு, பிப்ரவரி 27-ந் தேதி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், அணையை வலுப்படுத்தும் பணிகளை முடித்த பிறகு, முழுக் கொள்ளளவான 152 அடிக்கும் உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளித்தது.

கேரளா எதிர்ப்பு சட்டம்
ஆனால் இந்த தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் 2006-ஆம் ஆண்டு மார்ச் 18ந் தேதி கேரள சட்டமன்றத்தில் அணை பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இதனால் உச்சநீதிமன்றத்தீர்ப்பை அமல்படுத்த முடியாது என்றது கேரளா

தமிழகம் மேல்முறையீடு
கேரளாவின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

நீதிபதி ஆனந்த் குழு
அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 2010 பிப்ரவரி 18ந் தேதி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பிறகு, 2012 ஏப்ரல் 25ந் தேதி முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதாக உள்ளதாகவும், நில அதிர்வுகளால் கூட அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் வல்லுனர் குழு அறிக்கை அளித்தது.

வழக்கு விசாரணை
2013 ஆகஸ்ட் 13-ந் தேதி இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு
இன்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், 142 அடியாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்த ஒப்புதல் அளித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

எத்தனை எத்தனை போராட்டங்கள்..
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்ற போதும், தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்காக எண்ணற்ற போராட்டங்கள், முழு அடைப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

நிம்மதி..
இப்போது இந்த சட்ட போராட்டங்களுக்கும் அரசியல் போராட்டங்களுக்கும் பலனளிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்கிறது என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சி.












Click it and Unblock the Notifications