சென்னைக்கு பத்திரமாக வந்த நுரையீரல்.. நடுவழியில் நடந்த ஆக்சிடண்ட்.. தடைகளை தகர்த்து சாதனை
மும்பையைச் சேர்ந்த பிரபல டாக்டர் ஒருவர் புனேவில் விபத்தில் சிக்கி காயம் அடைந்த போதிலும், நோயாளியின் உயிரைக் காப்பாற்ற புனேவில் இருந்து சென்னை வந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார். அவரது செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது
நவி மும்பையின் அப்பல்லோ மருத்துவமனையில் தலைமை இருதய அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளவர் டாக்டர் சஞ்சீவ் ஜாதவ். இவர் புனேவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மஹாராஷ்டிராவின் பிம்ப்ரி-சின்ச்வாடில் மூளைச் சாவு அடைந்த 19 வயது இளைஞரின் நுரையீரலுடன் சென்னைக்கு செல்ல நேற்று முன்தினம் மதியம் புனே பிம்ப்ரியில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் நுரையீரலை எடுத்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து புனே விமான நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் பயணித்தது. டாக்டர் சஞ்சீவ் ஜாதவ் மற்றும் அவரது குழுவினர் ஆம்புலன்ஸில் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு வேன் மீது மோதி பின்னர் ஒரு அரசு பேருந்து மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்தது. இதன்பின்னர் ஹாரிஸ் பாலத்தின் சுவரில் மோதி நின்றது.
மருத்துவர் மற்றும் அவரது குழுவினரையும் ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் அவர்கள் காயமடைந்தனர். வாகனம் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், ஹாரிஸ் பாலத்தின் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் சேதமடைந்ததுடன், டாக்டர் ஜாதவ் மற்றும் சக மருத்துவர் ஒருவரும் காயமடைந்தனர்.
எனினும் காயத்தை பொருட்படுத்தாது, டி.ஒய். பாட்டீல் மருத்துவமனையிலிருந்து ஒரு பேக்அப் காரை வரச் சொன்னார் டாக்டர் ஜாதவ். பின்னர் அந்த காரில், மருத்துவர் ஜாதவ் தனது குழு மற்றும் நுரையீரலுடன் ஏறி விமான நிலையத்தை அடைந்தார். அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு குழு உடனடியாக புறப்பட்டது.

நுரையீரலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்த போதிலும், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் சென்னை விரைந்து கேரளாவைச் சேர்ந்த நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை கடந்த நவம்பர் 20ம் தேதி வெற்றிகரமாகச் செய்து முடித்தார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், கடந்த 72 நாட்கள் வெண்டிலேட்டரில் இருந்த நோயாளி தற்போது நலமாக இருக்கிறார். விபத்தில் காயம் அடைந்த போதிலும், நோயாளியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக புனே டாக்டர் சென்னைக்கு வந்து அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications