மேகி நூடுல்ஸை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மும்பை ஹைகோர்ட் அனுமதி
மும்பை: மேகி நூடுல்ஸை வெளிநாடுகளுக்கு ஏற்றமதி செய்ய நெஸ்லே நிறுவனத்திற்கு மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேகி நூடுல்ஸுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்தது. இதையடுத்து பல கோடி மதிப்புள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை நெஸ்லே சந்தையில் இருந்து வாபஸ் பெற்று அவற்றை அழித்தது.
இந்நிலையில் நூடுல்ஸுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திடம் கேட்டிருந்தது.
ஆணையமும் மேகிக்கு தடை விதித்தது குறித்த விளக்கத்தை 60 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக சமர்பித்தது. இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேகி நூடுல்ஸை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கோரிய நெஸ்லேவின் கோரிக்கையை ஏற்றுள்ளது.
மேகி நூடுல்ஸில் பிரச்சனை இல்லை என்றால் எதற்காக அதை நெஸ்லே நிறுவனம் அழித்துள்ளது என்று அரசு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். அதற்கு நீதிபதி கூறுகையில், மேகி நூடுல்ஸை ஏற்றுமதி செய்ய அந்த நிறுவனத்திற்கு உரிமை உள்ளது என்றார்.
வழக்கு விசாரணை ஜூலை 14ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.