பலாத்காரம் செய்யப்பட்டதால் 42 ஆண்டாக கோமாவில் இருந்த நர்ஸ்…. இன்று மரணம்!
மும்பை: மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், வார்டு பாயால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, நினைவிழந்த நிலையில் கோமாவில் சிகிச்சை பெற்று வந்த நர்ஸ் அருணா ஷான்பாக் இன்று உயிரிழந்தார்.
அவர் பணி புரிந்த மருத்துவமனையிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உயிரிழந்தது சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 42 வருடமாக இவர் இந்த மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக சேவையில் ஆர்வம்
கர்நாடக மாநிலம் ஷிமோகாவைச் சேர்ந்தவர் அருணா ஷான்பாக். சிறுவயது முதலே சமூக சேவையில் ஆர்வம் கொண்ட அவர், படிப்பை முடித்தவுடன் மும்பையில் உள்ள கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனையில் பயிற்சி நர்சாக சேர அழைப்பு வந்ததது.
பல்வேறு கனவுகளுடன்...
பல்வேறு கனவுகளுடன் 1966 ஆம் ஆண்டு தனது 21 வயதில் கிங் எட்வர்டு மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக சேர்ந்தார்.
கனிவுடன் சேவையாற்றும் பாங்கு
சுறுசுறுப்பு, ஒழுங்கு நோயாளிகளிடம் காட்டும் கனிவு, ஆகியவற்றைக் கண்ட மருத்துவமனை நிர்வாகம் அருணாவை தேர்வு மூலம் நிரந்தர பணியாளராக்கிக் கொண்டது.
நடிகை டி.ஆர்.ராஜகுமாரி சாயல்
கருப்பு வெள்ளைப் படங்களில் நடித்த டி.ஆர்.ராஜகுமாரி போன்ற முகச்சாயலில் மிக அழகாய்த் தோன்றிய அருணா எப்போதும் உதட்டோரம் புன்னகை தவழ வலம் வந்ததால், மருத்துவமனையில் அவருக்கென ரசிகர் பட்டாளமே இருந்தது.
மனதை பறிகொடுத்த டாக்டர்
அ'ருணாவின் அழகிலும், அறிவிலும் மயங்கிய டாக்டர் சந்தீப் தேசாய் என்பவர், மனதை பறிகொடுத்தார். அருணாவும் காதலுக்கு பச்கைக் கொடி காட்ட, அவரின் குடும்பத்தினரோ எதிர்த்தனர். எனவே இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.
இந்தியாவையே உலுக்கிய சம்பவம்
காதல் ஜோடியின் மகிழ்ச்சியும் கனவும் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. அப்போது தான் அந்த கனவிலும் நினைக்காத கொடூரம் அரங்கேறி இந்தியாவையே உலுக்கியது.
என்ன நடந்தது?
1973 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி அருணாவுக்கு கருப்பு தினமாகிப் போனது. அவர் பணி புரிந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த வார்டு பாய் சோகன் லால் பார்த்தா வால்மீகி என்பவனால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார் அருணா.
நாய்ச் சங்கிலியால் இறுக்கிய கொடூரம்
அருணாவை கொடூரமாக பலாத்காரம் செய்த வார்டுபாய் அவரை நாய்ச்சங்கிலியால் கழுத்தை இறுக்கினான். இதில் அவரது மூளைக்கு செல்லக் கூடிய ஆக்சிஜன் தடைபட்டதால், அருணா கோமா நிலைக்குச் சென்றார். இந்த கொடூரம் நிகழ்ந்த அன்று அவருக்கு வயது 23.
கருணைக் கொலை - அனுமதி கேட்டு வழக்கு
அவர் பணிபுரிந்து வந்த மருத்துவமனையின் டாக்டர்கள், நர்சுகள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதி சிகிச்சை அளித்தாலும், அவரது பரிதாப நிலையைக் கண்டு எழுத்தாளர் பிங்கி விரானி என்பவர் அருணாவை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
உச்சநீதிமன்றம் மறுப்பு
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அருணாவை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க முடியாது என்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினர்.
42 ஆண்டுகள் கோமாவுக்குப் பிறகு
இந்நிலையில், 42 ஆண்டுகளாக சுய நினைவே இல்லாமல் கோமாவில் இருந்த அருணாவின் உயிர் இன்று (திங்கட் கிழமை ) காலை பிரிந்தது. இதனால் அந்த மருத்துவமனையே சோகத்தில் மூழ்கியுள்ளது.
ஜனத் திரளில் கரைந்த குற்றவாளி
கொடூர குற்றத்தை ஒப்புக் கொண்ட வார்டு பாய் சோகன் லால் பார்த்தா வால்மீகிக்கு 7 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. இன்று அவன் விடுதலையாகி மும்பை ஜனத் திரளில் கரைந்து போய் விட்டான். ஆனால் அருணா.....?












Click it and Unblock the Notifications