அயோத்தியில் பாபர் மசூதியை கட்டினால் மோடிக்கு எடைக்கு எடை தங்கம்: சமாஜ்வாடி தலைவரின் 'பரபர' பேச்சு
லக்னோ: அயோத்தியில் பாபர் மசூதியை மீண்டும் கட்டித் தந்தால் பிரதமர் நரேந்திர மோடிக்கு எடைக்கு எடை தங்கம் தருவோம் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் பரூக் கோசி பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கில் போடப்பட்ட யாகூப் மேமன் மனைவிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்குக்கு கடிதம் எழுதியவர் பரூக் கோசி.
இதற்காக அவரை சமாஜ்வாடி கட்சியின் மகாராஷ்டிரா மாநில துணைத்தலைவர் பதவியில் இருந்து முலாயம் சிங் சஸ்பென்ட் செய்தார்.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கோசி, அபுதாபியில் கோவில் கட்டுவதற்கு பிரதமர் மோடி நிலம் கேட்டு கிடைத்திருக்கிறது. 20 கோடி முஸ்லிம்களின் உணர்வுகளை மனதில் வைத்து அவர் அயோத்தியில் பாபர் மசூதியை கட்டித்தருவதற்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும். அப்படி அவர் பாபர் மசூதியை கட்டினால் முஸ்லிம்கள் எடைக்கு எடை தங்கம் வழங்குவார்கள் என கூறினார். கோசியின் இந்த கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.