கலவரத்துக்கு காரணமான சஞ்சீவ் பாலியானுக்கு மத்திய அமைச்சர் பதவி- அதிர்ச்சியில் முசாபர்நகர்வாசிகள்!!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முசாபர்நகரில் கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட படுமோசமான மத வன்முறைகளுக்கு காரணமாக இருந்த சஞ்சீவ் பலியான் மத்திய அமைச்சராக்கப்பட்டிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு முசாபர்நகரில் மத மோதல்கள் நிகழ்ந்தன. இதில் மொத்தம் 67 பேர் பலியாகினர். சுமார் 51 ஆயிரம் பேர் அகதிகளாக்கப்பட்டு இன்னமும் கூட முகாம்களில்தான் வாழ்ந்து வருகின்றனர்.

மோதலுக்கு காரணமானவர்கள்
இந்த மதமோதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த சஞ்சீவ் பாலியான் முசாபர்நகர் தொகுதியிலும் பிஜ்னோர் தொகுதியில் பரதெந்து சிங்கும் போட்டியிட்டு வென்றனர். இவர்களில் சஞ்சீவ் பாலியானுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
காயங்கள் கிளறிவிடப்படுகிறது..
இது குறித்து கருத்து தெரிவித்த முசாபர்நகர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள், எங்களது காயங்களை மீண்டும் கிளறிவிடுவது போல் இருக்கிறது சஞ்சீவ் பாலியானுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தது.. முசாபர்நகரில் மத மோதலை உருவாக்கியதற்காகவே அவருக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது என்று குமுறுகின்றனர்.
என்ன சொல்லுகிறது அரசு?
காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் பாஷா என்ற முகாமில் வசித்து வரும் அர்ஷத் முகமது கூறுகையில், 8 மாதங்கள் உருண்டோடிவிட்டன. இந்த மோதலுக்குக் காரணமான ஒருநபரை மத்திய அமைச்சராகுகிறீர்கள் என்றால் இந்த புதிய அரசாங்கம் எங்களுக்கு என்ன மாதிரியான செய்தியை சொல்ல விரும்புகிறது? என்று கேள்வி எழுப்புகிறார்.
துப்பாக்கி சகிதம் பாலியான் சகோதரர்
இதற்கு மாறாக சஞ்சீவ் பாலியானின் சகோதரரோ உற்சாகத்தின் உச்சத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். பத்திரிகையாளர்கள் அவரை சந்திக்க சென்ற போது கைகளில் துப்பாக்கி ஏந்தியபடிதான் அவர் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தாராம்.
மோடியின் திடீர் முடிவு
"நேற்று காலை 8.30 மணி இருக்கும்.. திடீரென நரேந்திர மோடி, சஞ்சீவ் பாலியானை அழைத்து குஜராத் பவனுக்கு வரச் சொன்னார். எங்களால் இதை நம்பவே முடியவில்லை.. மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறி வீட்டுக்கு வெளியே இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினார்.
அச்சத்தில் சிறுபான்மையினர்
ஏற்னெவே வாழ்விடங்களைவிட்டு முகாம்களில் முடங்கிக் கிடக்கும் சிறுபான்மையினரின் அச்சத்தை அதிகப்படுத்தும் வகையில் சஞ்சீவ் பாலியானை அமைச்சராக்கியிருக்கின்றனர் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications