கொல்கத்தா விவகாரம்.. எனது மகன் ஸ்கூல் டாப்பர்.. யாருக்கும் தீங்கு செய்யமாட்டான்.. சஞ்சய் ராயின் தாய்
கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பள்ளியில் டாப்பராக இருந்ததாகவும், யாருக்கும் தீங்கு செய்மாட்டான் என்றும் அவரது தாய் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் விட்டுச் சென்ற புளூடூத் மூலம் அடையாளம் காணப்பட்டு, போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த பெண் மருத்துவரின் தலை, முகம், கழுத்து, கைகள், பெண்ணுறுப்பு என 14 இடங்களில் கொடூர காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிபயங்கர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கழுத்து நெறிக்கப்பட்டதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெண் உயிரிழந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் மிகவும் வக்கிரமானவராகவும், ஆபாசத்துக்கு அடிமையாகியும் உள்ளார். அவருக்கு விலங்கு போன்ற உள்ளுணர்வு உள்ளது தெரியவந்துள்ளது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மருத்துவரின் கொடூர கொலை குறித்து அவருக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. கொஞ்சம்கூட அச்சம்பவத்துக்கு அவர் மனம் வருந்தவில்லை. அங்கு நடந்த ஒவ்வொரு நிமிட சம்பவம் குறித்தும் தெளிவாக விவரித்துள்ளார் என்று சிபிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, சஞ்சாய் ராயின் தாய் கூறுகையில், "எனது மகன் சஞ்சய் ராய் பள்ளியில் முதலிடம், தேசிய கேடட் கார்ப்ஸிலும் ஓர் அங்கமாக இருந்தார். நான் இன்னும் கண்டிப்புடன் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. சஞ்சய் ராயின் தந்தை மிகவும் கண்டிப்பானவர். என் கணவர் இறந்தவுடன் எல்லாமே தவறாகப் போய்விட்டது. எனது அழகான குடும்பம் இப்போது ஒரு நினைவாக மட்டும்தான் உள்ளது.
இந்த சம்பவத்தை செய்ய அவரை யார் தூண்டினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. யாராவது அவரை இதுபோன்ற செயலைச் செய்ய தூண்டியிருந்தால் அந்த நபர் தண்டிக்கப்படுவார். எனது மகன் என்னை நன்றாக கவனித்துக் கொள்வார். எனக்கு சமையல் கூட செய்து தருவது வழக்கம். நீங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூட சஞ்சய் குறித்து விசாரிக்கலாம்.
அவர் இதுவரை யாரிடமும் தவறாக நடந்து கொண்டதில்லை. அவரை நான் சந்தித்தால் "பாபு ஏன் அப்படிச் செய்தாய்?" என்று கேட்பேன். என் மகன் இப்படி இருந்ததில்லை. சஞ்சயின் முதல் மனைவி புற்றுநோயால் உயிரிழந்ததையடுத்து அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். சஞ்சயின் முதல் மனைவி மிகவும் நல்ல பெண். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். திடீரென அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. ஒருவேளை அவர் தனது மனைவியின் மரணத்திற்குப் பின்னர் மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம். அதனால்தான் குடிப்பழக்கத்துக்கும் ஆளானார் என்றார்.
சஞ்சய் ராயின் மாமியார் கூறுகையில், சஞ்சய் ராய் செய்த குற்றத்திற்கு அவருக்கு தூக்கு தண்டணை வழகங்க வேண்டும். அவருடனான உறவு எனக்கு மிகுந்த பதட்டமாகதான் இருந்தது. எனது மகளை திருமணம் செய்த தொடக்கத்தில் ஆறு மாதங்கள் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. எனது மகள் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தபோது அவர் கருச்சிதைவு செய்தார்.
அவளை கடுமையாகத் தாக்கினார். இது தொடர்பாக காவல் துறையில் புகார் பதிவு செய்யப்பட்டது. எனது மகள் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டிருந்ததால் மருந்துகளுக்கான அனைத்து செலவுகளையும் நான் ஏற்றுக் கொண்டேன். சஞ்சய் நல்ல மனிதர் இல்லை. அவரை தூக்கிலிடுங்கள் அல்லது அவரை என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள். இந்த குற்றத்தைப் பற்றி நான் பேசமாட்டேன். அதை அவரால் மட்டும் தனியாக செய்திருக்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications