நாகாலாந்து ஆளுநர் வைக்கம் புருஷோத்தமன் ராஜினாமா!
கோஹிமா: நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட வைக்கம் புருஷோத்தமன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு அமைந்தது முதலே மாநில ஆளுநர்கள் மாற்றப்படுவர் என்று கூறப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து மத்திய அரசும் சில மாநில ஆளுநர்களை பதவி விலக வலியுறுத்தி வந்தது.

இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், நாகாலாந்து மாநில ஆளுநர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். ஹெலிகாப்டர் ஊழல் பேர விவகாரத்தில் சிபிஐயால் விசாரிக்கப்பட்ட நிலையில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த எம்.கே. நாராயணன், கோவா ஆளுநராக இருந்த வான்சூ ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.
பின்னர் பதவி விலக மறுத்து வந்த மிசோரம் மாநில ஆளுநராக இருந்த வைக்கம் புருஷோத்தமனை நாகாலாந்து மாநிலத்துக்கு மாற்றியது மத்திய அரசு. குஜராத் மாநில ஆளுநராக இருந்த கமலா பெனிவாலை மிசோரம் மாநில ஆளுநராகவும் மாற்றி உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் தம்மை கலந்து ஆலோசிக்காமலேயே நாகாலாந்து மாநில ஆளுநராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வைக்கம் புருஷோத்தமன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
உத்தரவை திருப்பி அனுப்பினார்
அத்துடன் தம்மை நாகாலாந்து மாநில ஆளுநராக இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவையும் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார் வைக்கம் புருஷோத்தமன்.












Click it and Unblock the Notifications