பைக்கில் வந்த 2 பேருக்கு மரண பயத்தை காட்டிய யானை: வீடியோ இதோ
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் காட்டு யானை ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற இருவரை நசுக்கப் பார்த்தது.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள கோருமரா தேசிய பூங்காவில் வசித்து வரும் யானைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மக்களை மிரட்டுவது உண்டு. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு யானைகள் பூங்காவில் இருந்து வெளியேறியுள்ளன.
அப்போது ஒரு யானை மட்டும் தேசிய நெடுஞ்சாலையில் தனியாக நடந்து வந்தது. இதை பார்த்த மக்கள் அது செல்லும் வரை காத்திருந்தனர். இந்நிலையில் பைக்கில் வந்த இருவர் யானையைத் தாண்டி செல்ல முயன்றனர்.
பைக்கின் சப்தத்தால் ஆத்திரம் அடைந்த யானை அவர்களை தாக்கியது. பைக்கில் இருந்த ஒருவர் அங்கிருந்து ஓடிவிட்டார். மற்றொருவர் பைக்கின் அடியில் சிக்கிக் கொண்டார். யானை பைக்கை நசுக்க முயன்றபோது அந்த நபர் ஒரு வழியாக அங்கிருந்து தப்பியோடினார்.
யானை அவரை விடாமல் விரட்டிச் சென்றது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் அங்கு வந்து பட்டாசுகள் வெடித்து யானையை பூங்காவிற்கு செல்ல வைத்தனர். யானையை திரும்பிச் செல்ல வைக்க இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது.