நஸ்ருதீன் ஷா, அமீர்கான்,சித்து.. நீங்க எல்லாரும் துரோகிகள்… ஆர்எஸ்எஸ் திடுக் குற்றச்சாட்டு
அலிகார்:பிரபல பாலிவுட் நடிகர்கள் நஸ்ருதீன் ஷா, அமீர்கான், சித்து ஆகியோர் துரோகிகள் என்று ஆர்எஸ்எஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு மீது பசுவதை விவகாரம், ராமர் கோயில் உள்ளிட்ட பிரச்னைகளை மையப்படுத்தி கடுமையான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் பலமுறை எழுப்பின. எதிர்க் கட்சியினர் மட்டுமல்லாது திரையுலக த்தினரும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்திருந்த கருத்து மிக உன்னிப்பாக பார்க்கப்பட்டது. நமது நாட்டில் சிலர், போலீசாரின் உயிரை விட பசுவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனது குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி நான் மிகவும் கவலைப்படுகிறேன் என்று அவர் கூறிய வீடியோ வைரலானது.
கேள்வி எழுப்பிய நஸ்ரூதின் ஷா
அதேபோன்று மற்றொரு நடிகரான நஸ்ருதீன் ஷாவும் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அவர் கூறியது இதுதான்: நல்லது எது? கெட்டது எது? என்பதை நாம் குழந்தைகளுக்கு கண்டிப்பாக கற்று தருகிறோம்.
பதில் இல்லை
நம்பிக்கை என்றால் என்ன என்பதையும் போதிக்கிறோம். ஒருநாள் அவர்களை ஒரு கூட்டம் சூழ்ந்து கொண்டு நீ இந்துவா? முஸ்லீமா? என கேள்வி எழுப்பினால் அவர்களிடம் பதில் கிடையாது. இந்த நாடு எங்கள் வீடு. இங்கிருந்து யார் விரட்ட முடியும் என்று கூறியிருந்தார்.
கருத்துக்கு வரவேற்பு
அமீர்கானை காட்டிலும் நஸ்ருதீன் ஷாவின் கருத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந் நிலையில், நஸ்ருதீன் ஷாவை ஆர்எஸ்எஸ் அமைப்பு மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளது.
விமர்சித்த ஆர்எஸ்எஸ்
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் இந்த்ரேஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பிரபல இந்தி நடிகர்கள் நஸ்ருதீன் ஷா மற்றும் அமீர்கான் ஆகியோர் சிறந்த நடிகர்களாக இருந்துவிட்டு போகட்டும்.
தகுதியில்லாத துரோகிகள்
ஆனால் மரியாதை தருவதற்கு கூட தகுதியில்லாத துரோகிகள். கிரிக்கெட் வீரராக இருந்து வர்ணையாளராகவும், அரசியல்வாதியாகவும் மாறியிருக்கும் நவ்ஜோத் சிங் போன்றவர்கள் துரோகிகள்.
கலாமாக இருக்க வேண்டும்
அவர்கள், ராஜபுத்திர அரசின் ஜெயசந்திரன் மற்றும் வங்காள நவாப் மீர் ஜாபர் போன்றவர்கள். முஸ்லிகள் என்பவர்கள் அப்துல்கலாமை போல இருக்க வேண்டும்.... தீவிரவாதி அஜ்மல் கசாப் போல அல்ல.
எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு
ராமர்கோயில் கட்டும் விவகாரம் தாமதமாக முதல் காரணம் காங்கிரஸ். 2வது காரணம் இடதுசாரி கட்சிகள். சில மதவாத இயக்கங்கள் மூன்றாவது காரணம். சில நீதிபதிகள் 4வது காரணமாக அமைந்துள்ளனர் என்று கூறினார்.