பால்கனியில் மணமக்கள்... பேண்டு வாத்தியங்களுடன் வந்த போலீசார்... இப்படித்தான் நடக்க வேணும் திருமணம்!
வீட்டிலேயே திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதிக்கு நாசிக் போலீசார் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.
நாசிக்: மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில், வீட்டிலேயே திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதிக்கு போலீசார் அளித்த வரவேற்பு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 45 நாட்களுக்கு மேலாக இந்திய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஒருபுறம் ஏழை எளிய தொழிலாளர்கள் வருமானம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த கொடுமையில் இருந்து எப்போது தப்பிப்போம் என மக்கள் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஏப்ரல், மே மாதங்களில் நிச்சயம் செய்யப்பட்டிருந்த பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோயில்களும் மூடப்பட்டுள்ள நிலையில், சிலர் தங்கள் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடங்கி வருகின்றனர்.
அப்படித்தான் மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் வீட்டிலேயே மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். அதை அறிந்த அந்த ஊர் போலீசார், புதுமண தம்பதியின் இந்த செயலை பாராட்டும் வகையில் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் நாசிக் போலீஸ். அந்த வீடியோவில், புதுமண தம்பதி தங்கள் வீட்டு பால்கனியில் நிற்கின்றனர். பேண்ட் வாத்தியங்கடன் கீழே இருக்கும் போலீசார் இந்தி பட பாடல் ஒன்றை பாடி தம்பதியை வாழ்த்துகின்றனர். அக்கம் பக்கத்தில் இருக்கும் மக்கள் இதனை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
"கொரோனா ஊரடங்கு உத்தரவை மதித்து தங்கள் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு வாழ்த்துகள். அவர்களை பாராட்டுவதற்காகவே நாசிக் போலீஸ் இப்படி செய்கிறது", என அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்திலும், அந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications