ஒடிஷாவில் 4-வது முறையாக முதல்வராகிறார் நவீன் பட்நாயக்!
புவனேஸ்வரம்: ஒடிஷா மாநிலத்தில் 4வது முறையாக நவீன் பட்நாயக் முதல்வராக பொறுப்பேற்கிறார்.
ஒடிஷா மாநில சட்டசபை தேர்தலில் 147 தொகுதிகளில் 117-ஐ பிஜு ஜனதா தளம் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸுக்கு 16 இடங்களும், பாஜகவுக்கு 10 இடங்களும் கிடைத்தன.
கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் பிஜு ஜனதா தளத்திற்கு 103 இடங்கள்தான் கிடைத்தன. இப்போது அக்கட்சிக்கு 14 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன.

இதைத் தொடர்ந்து தலைநகர் புவனேஸ்வரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிஜு ஜனதா தளக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் சட்டசபை குழுத் தலைவராக நவீன் பட்நாயக்கை நியமிக்கும் தீர்மானத்தை மூத்த எம்.எல்.ஏ. வி.சுக்யான் குமாரி தியோ முன்மொழிந்தார். அதை எம்.எல்.ஏ. தாமோதர் ராவுத் வழிமொழிந்தார்.
இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவீன் பட்நாயக், 4-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். அவர் 2000-ம் ஆண்டிலிருந்து முதல்வராக இருந்து வருகிறார்.
தன்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்த நவீன் பட்நாயக், ஒடிஷாவின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications