மும்பை வான்வெளியில் கிட்டத்தட்ட நேருக்கு நேர் மோத வந்த எதிஹாட், எமிரேட்ஸ் விமானங்கள்
மும்பை: மும்பை வான்வெளியில் எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் விமானங்கள் நேருக்கு நேர் மோதப் பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய பெருங்கடலில் இருக்கும் தீவு நாடான செஷல்ஸில் இருந்து கடந்த 29ம் தேதி இரவு எமிரேட்ஸ் விமானம் இகே- 706 துபாய் கிளம்பியது. மேலும் எதிஹாட் நிறுவன விமானம் இஒய்- 622 அபுதாபியில் இருந்து செஷல்ஸ் சென்று கொண்டிருந்தது. இந்த இரு விமானங்களும் மும்பை வான்வெளியில் எதிர் எதிர் திசையில் பறந்தன. அப்போது விமானங்கள் நேருக்கு நேர் மோதும் அளவுக்கு மிக அருகில் வந்துவிட்டன.

விமானங்கள் மிக அருகில் வந்ததை பார்த்த மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் ஒரு விமானத்தின் விமானிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இது குறித்து எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
செஷல்ஸில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் மும்பை வான்வெளியில் விபத்துக்குள்ளாகும்படி சென்று பிறகு தப்பித்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறோம். ஆனால் விமானம், அதில் இருந்த பயணிகள், சிப்பந்திகளுக்கு எந்த நேரத்திலும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அருகில் வேறு விமானம் வந்தால் உடனே விமானிக்கு தகவல் தெரிவிக்கும் சிஸ்டம் அனைத்து எமிரேட்ஸ் விமானங்களிலும் உள்ளது. இது குறித்த விசாரணையில் மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுத் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிஹாட் நிறுவன செய்தித் தொடர்பாளர் இது குறித்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. ஏமனில் நடக்கும் உள்நாட்டு போரால் அந்த வழியாக விமானங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அந்த வான்வெளி பாதை மூடப்பட்டுள்ளதால் எமிரேட்ஸ், எதிஹாட் நிறுவனங்கள் செஷல்ஸுக்கு மும்பை மற்றும் மஸ்கட் வழியாக விமானங்களை இயக்குகின்றன.












Click it and Unblock the Notifications