'மோடி தொகுதியில்' பரபரப்பு: காரில் இருந்து 150 கிலோ ரசாயன வெடிபொருட்கள் பறிமுதல்!
வாரணாசி: வாரணாசியில் தனியாக நின்று கொண்டிருந்த கார் ஒன்றில் சுமார் 150 கிலோ ரசாயன வெடிபொருட்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பெலுபூர் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலகாபாத்தில் இருந்து கார் ஒன்று வந்தது. காரை ஓட்டி வந்தவர் போலீசார் வாகனங்களை சோதனை செய்வதை பார்த்தார். உடனே அவர் காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
அவர் ஓடுவதை பார்த்த போலீசார் விரைந்து சென்று காரை பரிசோதனை செய்தனர். அப்போது காரில் சுமார் 150 கிலோ ரசாயன வெடிபொருட்கள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
வெடிபொருட்களை பறிமுதல் செய்த போலீசார் காரின் உரிமையாளர் மற்றும் தப்பியோடிய டிரைவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.