தென்னாப்பிரிக்காவுக்கு நெதர்லாந்து அளித்த அதிர்ச்சி; இந்தியா, பாகிஸ்தானுக்கு கோப்பை வாய்ப்பு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அபாரமான ஆட்டத்தால் வெற்றிபெற்று கிரிக்கெட் உலகை மீண்டும் ஒருமுறை வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது நெதர்லாந்து.
இந்தப் போட்டியின் முடிவால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து தென்னாப்பிரிக்கா வெளியேறி இருப்பதுடன், இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.
முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 158 ரன்கள் எடுத்த நிலையில் அந்த ரன்களை எடுக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி சுருண்டது. 13 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.
சிறப்பான பேட்டிங், அற்புதமான பீல்டிங், கிரேட் கேட்ச்கள் என நெதர்லாந்து அணி ஆட்டம் முழுவதுமே ஆக்கிரமித்திருந்தது.
போட்டியின் முடிவில் பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா, 'இது ஜீரணிக்க முடியாத தோல்வி' என்று கூறினார். அது உண்மைதான் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் மிகப்பெரிய அதிர்ச்சிகளில் ஒன்றாகவே இது கருதப்படுகிறது.
இனி வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான போட்டி அவ்விரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா போராட்டமாக இருக்கும். வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
ஞாயிற்றுக் கிழமையன்று டி20 உலகக் கோப்பை குரூப்-2 பிரிவில் நடக்கும் இந்த மூன்று போட்டிகளுமே அரையிறுதிக்குச் செல்லும் அணிகளைத் தீர்மானிப்பவையாகவே கருதப்பட்டன.
இந்தப் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய 5 அணிகளுக்கும் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதால் இந்தப் போட்டிகள் முக்கியத்துவம் உள்ளவை.
- இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளில் நடக்கப் போகும் 'ட்விஸ்ட்' என்ன? - எளிய விளக்கம்
- இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியில் ராகுல் டிராவிட்டின் பங்கு என்ன?
- இலங்கையின் தோல்வியால் ஆஸ்திரேலியாவுக்கு 'பை பை' - ஏன் இப்படி நடக்கிறது?
இந்தப் பிரிவில் இருக்கும் 6 அணிகளுக்குமே இவை தங்களது கடைசிப் போட்டிகள். வெற்றி தோல்விகள் மாத்திரமல்லாமல் மழையால் ஆட்டங்கள் ரத்தாவதும்கூட அணிகளின் அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும் என்ற நிலை இருந்தது.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்லுமா?
பாகிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்திருக்கிறது. அதனால் 4 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அந்த அணியின் ரன்ரேட் 1.117. அடுத்ததாக அந்த அணி வங்கதேசத்துடன் மோத இருக்கிறது.
இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அந்தப் போட்டி தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த அணி 6 புள்ளிகளைப் பெறும். இதன் மூலம் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
இந்தியாவுக்கு ஜிம்பாப்வேயுடனான போட்டி எந்த அளவு முக்கியம்?
நெதர்லாந்து அணியுடன் தென்னாப்பிரிக்க தோற்றுவிட்டதால் இந்திய அணி ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது.
இந்தியா இதுவரை 4 போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. ஜிம்பாப்வேயுடனான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கி நடக்க இருக்கிறது.
வங்கதேசத்துக்கு வாய்ப்பிருக்கிறதா?
வங்கதேச அணி இப்போது 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்தாக பாகிஸ்தானுடன் ஆடவுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















Click it and Unblock the Notifications