ஜம்மு காஷ்மீரில் பத்திரிகைகளுக்கு தடை? மெகபூபா முப்தி விளக்கம்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் நீடிக்கும் வன்முறையால் பத்திரிகைகளுக்கு எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை என்று அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி விளக்கம் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ரீநகருக்கு அருகே பத்திரிகை அலுவலகங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நுழைந்த போலீசார் அச்சிடும் பணியை வலுக்கட்டாயமாக நிறுத்தியிருந்தனர்.
இதனைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் ஆங்கிலம், உருது, காஷ்மீரி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்படும் செய்தித்தாள்களின் விநியோகம் 3-வது நாளாக நேற்று நிறுத்தப்பட்டது.
மேலும் வன்முறை தொடர்பான செய்திகளை வெளியிடக் கூடாது என போலீசார் மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்த அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி, பத்திரிகைகளுக்கு எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை. ஜம்மு காஷ்மீரில் ஆங்கிலம், உருது, காஷ்மீரி மொழி பத்திரிகைகள் தாரளமாக கிடைக்கிறது என்றார்.