நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வாங்கியதில் ஒரு விதிமீறலும் இல்லை: கோர்ட்டில் சோனியா வக்கீல் வாதம்!!
டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை யங் இந்தியா நிறுவனம் வாங்கியதில் எந்தவித சதியும், விதிமீறலும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி சம்மன் அனுப்பியிருந்தது.

இதனை எதிர்த்து அவர்கள் அனைவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி சுனில் கெளர் தலைமையிலான பெஞ்ச் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சோனியா காந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடியதாவது:
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருப்பது முற்றிலும் விதிமீறலாகும்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை யங் இந்தியா நிறுவனம் வாங்கியது ஒரு சாதாரண வர்த்தக நடவடிக்கையாகும். இதில் நம்பிக்கை மோசடிக்கோ, குற்றச் சதிக்கோ, அல்லது யாரையேனும் ஏமாற்றியிருப்பதற்கோ இடமில்லை
யங் இந்தியா நிறுவனம் தர்ம காரியங்களில் ஈடுபடப்போவதாக திட்டமிட்டதால்தான், காங்கிரஸ் கட்சி சார்பில் அந்த நிறுவனத்துக்கு ரூ.90 கோடி கடன் வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சுப்பிரமணியன் சுவாமி ஏன் குற்ற வழக்கு தொடர்ந்தார் எனத் தெரியவில்லை.
இது தனிப்பட்ட நிறுவனத்தின் விவகாரமாகும். முன்பின் தெரியாதவர்கள் அதன் பணப்பரிமாற்றங்கள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது .
இவ்வாறு கபில்சிபல் வாதாடினார்.












Click it and Unblock the Notifications