ஜெ.வுக்கு என்னாச்சு? மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர்- சசிகலா புஷ்பா
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வெளிப்படை தன்மை இல்லை என்று சசிகலா புஷ்பா குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலைக்கு என்னதான் ஆனது? என்பதை அறிய மக்கள் விரும்புவதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.
அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இச்செய்தி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து அதிமுகவினர் அப்பல்லோ மருத்துவமனையில் பல்லாயிரக்கணக்கில் பதற்றத்துடன் குவிந்துள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சசிகலா புஷ்பா அளித்த பேட்டியில், ஜெயலலிதா உடல்நிலை பற்றிய தகவலில் வெளிப்படைத்தன்மையே இல்லை.
அவருக்கு என்னதான் ஆனது? என்பது குறித்து அறிய பொதுமக்கள் ஆவலாக உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி கண்டிப்பாக தலையிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிப்புக்கு சசிகலா நடராஜனே காரணம் என குற்றம்சாட்டி வருகிறவர் சசிகலா புஷ்பா என்பது குறிப்பிடத்தக்கது.