அம்பானியின் பாக்கெட்டில் மோடி, ராகுல்: ராகுலிடம் கடிதம் மூலம் 4 நறுக் கேள்விகள் கேட்ட கெஜ்ரிவால்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியிடம் கடிதம் மூலம் 4 கேள்விகள் கேட்டுள்ளார்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் ஒரு பாக்கெட்டில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், மற்றொரு பாக்கெட்டில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்த இருவரில் யார் ஆட்சியை பிடித்தாலும் நாட்டை ஆளப் போவது என்னவோ அம்பானி தான் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவால் ராகுலுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே ஒரு யூனிட் கேஸுக்கு 4 டாலர்கள் பெறுகிறது. ஒரு யூனிட் கேஸுக்கு 2.3 டாலர்கள் கொடுக்கவே சம்மதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விலையை ஒரு யூனிட்டுக்கு 8 டாலர்காக உயர்த்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸுக்கு ரூ.54 ஆயிரம் கோடி லாபம் ஏற்படும்.
வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் நாட்டில் பயம் ஏற்படும். சமையல் கேஸ், போக்குவரத்து மற்றும் உரங்களின் விலை உயர்ந்து உணவுப் பொருட்களின் விலை உயரும். நீங்களும், மோடியும் இந்த விவகாரத்தில் ஏன் அமைதியாக உள்ளீர்கள்?
தேர்தல் வரும் நேரத்தில் கேஸ் விலை எதற்காக இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மக்கள் வியக்கின்றனர். காங்கிரஸ் கட்சி முகேஷ் அம்பானியிடம் இருந்து ஏதாவது பெறுகிறதா?. அப்படி என்றால் அது என்ன?
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கையில் அம்பானிக்கு எதிராக டெல்லியின் ஊழல் எதிர்ப்பு பிரிவு வழக்கு தொடர்ந்தபோது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முகேஷ் அம்பானியுடன் இந்த 2 கட்சிகளுக்கும் அவ்வளவு உறவு உள்ளதா? என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரிலையன்ஸ் கேஸ் விலை பற்றி கெஜ்ரிவால் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications