கேரள நர்ஸ்களை கிண்டலடித்துப் பேசிய ஆம் ஆத்மி குமார் விஸ்வாஸ்... நர்ஸ்கள் கொதிப்பு!
டெல்லி: கேரளாவைச் சேர்ந்த நர்ஸ்கள் குறித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த வாய்க்கொழுப்பு வீரர் குமார் விஸ்வாஸ் கிண்லடித்துப் பேசியிருப்பதற்கு கேரள நர்ஸ்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த விஸ்வாஸ் இப்படி சர்ச்சைக்கிடமாக பேசுவது இது முதல் முறையல்ல என்பதால் விஸ்வாஸை, கெஜ்ரிவால் கண்டித்து அடக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்துள்ளன.
ஏற்கனவே காஷ்மீர் குறித்துப் பேசி சர்ச்சையில் சிக்கினார் விஸ்வாஸ். இவர்தான் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஸ்வாஸ் கேரள நர்ஸ்கள் குறித்து தற்போது பேசியுள்ள பேச்சை கேரளத்தவரை சூடாக்கியுள்ளது. விஸ்வாஸ் தனது பேச்சின்போது, முன்பெல்லாம் நர்ஸ்கள் என்றாலே ஆண்களுக்கு சந்தோஷமாக இருந்தது. காரணம், அவர்கள் பெரும்பாலும் கேரளாவிலிருந்து மட்டுமே வந்தனர் என்பதால். கேரள நர்ஸ்கள் கருப்பானவர்கள். இதனால் அவர்களை சிஸ்டர் என்று கூப்பிட்டனர். இந்தப் பெண்களில் பலர் தங்களது பேஸ்புக்கில் படங்களைக் கூட போட மாட்டார்கள். ஆனால் இப்போது வட இந்திய நர்ஸ்கள் வந்து விட்டனர். அவர்கள் கவர்ச்சிகரமாக இருக்கிறார்கள் என்று பேசியுள்ளார் விஸ்வாஸ்.
இந்தப் பேச்சை யூடியூபிலும் போட்டுள்ளார் இந்த விஸ்வாஸ். விஸ்வாஸின் கருத்துக்கு கண்டனங்கள் குவிந்துள்ளன. கேரள நர்ஸ்கள் சங்கங்கள் பலவும் விஸ்வாஸைக் கண்டித்துள்ளன.
கொச்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தை இளைஞர் காங்கிரஸார் அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர்.
தொடர்ந்து சர்ச்சைக்கிடமாகவே பேசி வருகிறார் இந்த விஸ்வாஸ். இதற்கு முன்பு அரவாணிகள் குறித்து சர்ச்சையாக பேசினார். முஹர்ரம் குறித்து கருத்து தெரிவித்து வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
ஆனால் நர்ஸ் குறித்து விஸ்வாஸ் பேசியதாக கூறப்படும் வீடியோ மிகவும் பழையது என்றும் 2 ஆண்டுகளுக்கு முந்தைய வீடியோ என்றும் விஸ்வாஸுக்கு நெருக்கமானவர்கள் சப்பைக் கட்டு கட்டியுள்ளனர்.
என்ன வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம்.. என்பது வழக்கமான அரசியல்வாதிகளின் பொதுப் பண்பு. அப்படிப்பட்ட அரசியல்வாதிகள், அரசியலை எதிர்த்து அரசியல் செய்ய ஆம் ஆத்மியைச் சேர்ந்த குமார் விஸ்வாஸ் இப்படிப் பேசுவது நல்லதா.. கெஜ்ரிவால் சிந்திக்க வேண்டும்.