மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. யானையை காப்பாற்ற மீட்பு குழுவுடன் சென்ற செய்தியாளர் பலி!
புவனேஸ்வரம்: ஒடிஸாவின் பிரபல டிவி சேனலின் செய்தியாளர் ஆரிந்தம் தாஸ் மகாநதி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட யானையை காப்பாற்ற முயன்ற போது மீட்புக் குழுவின் படகு கவிழ்ந்து பலியாகிவிட்டார்.
ஒடிஸாவின் முன்னணி டிவி சேனலின் செய்தியாளர் ஆரிந்தம் தாஸ் (39). இவர் களத்தில் இறங்கி பணியாற்றுவதை விரும்புபவர். பைலின் புயல், ஃபனி புயல் ஆகிய இயற்கை இடர்களின் போதும் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையின் போதும் ஆபத்தை மறந்து களத்தில் இருந்து செய்திகளை உடனடியாக தந்தவர்.
ஒடிஸா மாநிலம் கட்டாக் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மகாநதி ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. அப்போது முண்டாலி என்ற பகுதியில் ஆற்றை கடக்க முயன்ற யானை மகாநதி ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

ஆழமான பகுதி
இதுகுறித்து தகவலறிந்த மீட்புக் குழு யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த குழுவுடன் செய்தி புகைப்படக் கலைஞர் ஆரிந்தமும் சென்றிருந்தார். யானை மிகவும் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் மீட்புக் குழுவினர் படகில் சென்று மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஆரிந்தமும் அந்த படகில் சென்றிருந்தார்.

ஆபத்தான நிலை
அந்த சமயத்தில் காற்றின் வேகமும் நீரின் வேகமும் அதிகமாக இருந்ததால் இவர்கள் சென்ற படகானது தண்ணீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆரிந்தம் தாஸ் நீரில் மூழ்கி பலியாகிவிட்டார். மீட்புக் குழுவில் உள்ள ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரங்கல்
மேலும் 3 மீட்பு குழுவை சேர்ந்த வீரர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். புகைப்படக் கலைஞர் மறைவுக்கு ஒடிஸா ஆளுநர் கணேஷ் லால், முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆரிந்தத்திற்கு தாய், மனைவி, ஒரு மகன் உள்ளனர்.

கேமரா மேன்
ஆரிந்தத்துடன் மீட்பு பணிக்கு சென்றிருந்த மற்றொரு கேமராமேன் பிரவாத் சிங்காவும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மீட்பு படையினர் கூறுகையில் ஆரிந்தத்தை உயிருடன் மீட்க நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அவரது உடல் மட்டுமே மீட்கப்பட்டது என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications