ஒடிசாவில் இருந்து சென்னைக்கு இன்று மேலும் ஒரு சிறப்பு ரயில்.. தேவைப்பட்டால் பார்சல் வேனும் இணைப்பு
புவனேஷ்வர்: ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த பயணிகள் வருவதற்காக இன்று மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பாதராக் ரயில் நிலையத்தில் இருந்து நண்பகல் 1 மணிக்கு இந்த ரயில் கிளம்புகிறது. தேவைப்பட்டால் பார்சல் வேனும் இணைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 3 ரயில்கள் ஒடிசாவில் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் ரயில் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டும் ஒன்றுக்கு மேல் ஒன்று விழுந்தும் பலத்த சேதம் அடைந்தது.

இரு பயணிகள் ரயிலிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்ததால் பலி எண்ணிக்கையும் காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. அதாவது 294 பேர் உயிரிழந்தனர். 750-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். சென்னை நோக்கி வந்த ரயில் விபத்தில் சிக்கியிருக்கும் நிலையில், இந்த விபத்தில் தமிழர்கள் யாரும் சிக்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிந்து அவர்களை மீட்பதற்காக, தமிழக அரசின் அமைச்சர்கள், அதிகாரிகளைக் கொண்ட குழு ஒடிசாவில் முகாமிட்டுள்ளது.
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் உள்ளிட்டோர் அடங்கிய இந்த குழு ஒடிசாவில் தங்கியிருந்து ரயிலில் பயணித்த தமிழர்கள் குறித்த விவரங்களை சேகரித்தும் அவர்களை பாதுகாப்பாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் விபத்து நடந்த பாலசோர் என்ற இடத்தில் நடைபெற்ற மீட்புப் பணிகளை கண்காணித்து உதவி வந்தனர்.
மற்றொரு குழுவான ஐஏஎஸ் அதிகாரிகள் குமார் ஜெயந்த், அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் ஒடிசாவில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் ரயில் விபத்தில் உயிரிந்த மற்றும் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்களை சேகரித்து வந்தனர். இதற்கிடையே, ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்லவும், அங்கு இருப்பவர்கள் சென்னை வரவும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் சிறு காயம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் வருவதற்காக சிறப்பு ரயில் நேற்று சென்னைக்கு புறப்பட்டது. ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த 250 பயணிகளுடன் சிறப்பு ரயில் பாதராக் பகுதியில் இருந்து புறப்பட்டது. பிரம்மாபூர் , விசாகப்பட்டினம் , ராஜமுந்திரி , விஜயவாடா வழியாக வந்த இந்த ரயில் இன்று அதிகாலை 4.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது.
இந்த ரயிலில் 131 பயணிகள் சிறப்பு வருகை தந்தனர். அவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையிலான குழு வரவேற்றது. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவும் தயார் நிலையில், இருந்தது. இந்த நிலையில், ஒடிசாவில் இருந்து இன்று மேலும் ஒரு சிறப்பு ரயில் சென்னைக்கு இயக்கப்படுகிறது.
பதாரக் ரயில் நிலையத்தில் இருந்து நண்பகல் 1 மணிக்கு இந்த ரயில் கிளம்பும். இந்த ரயில் கட்டாக் உள்பட வழியில் உள்ள அனைத்து பெரிய ரயில் நிலையத்திலும் நிற்கும். தேவைப்பட்டால் இந்த ரயிலுடன் சடலங்களை கொண்டு செல்வதற்காக ஒரு பார்சல் வேனும் இணைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications