பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்.. 500க்கும் மேற்பட்டோர் காயம்! 8 பேர் நிலை மோசம்
பூரி: ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், 8 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கடற்கரை நகரமான பூரியில் ஜெகன்நாதர் கோவில் உள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று.

பூரியில் ஜெகன்நாதர் கோவிலில் மூலவர்களாக பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது. ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் செய்யப்பட்டு, அந்த தேர்களில் மூலவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுத்துச் செல்வார்கள்.
பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரை விழா 9 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று தொடங்கியது. இதையொட்டி லட்சக்கணக்கான மக்கள் பூரி நகரில் திரண்டனர். ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் மாநில காவல்துறையின் 10 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், பூரி ரத யாத்திரையில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலானோர் சிறிய காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர். பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications