டெல்லி அருகே பயங்கரம்... துப்பாக்கி முனையில் தாய்-மகளை பலாத்காரம் செய்த 12 பேர் கும்பல்- 3 பேர் கைது
டெல்லி: டெல்லி அருகே காரில் சென்று கொண்டிருந்த தாய், மகள் இருவர் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புலந்த்ஷஹர் மாவட்டம் வழியாக டெல்லி-கான்பூர் நெடுஞ்சாலையில் நொய்டாவைச் சேர்ந்த தாயும் மகளும் காரில் சென்றனர். அப்போது சாலையோரம் நின்றிருந்த 15-க்கும் மேற்பட்டோர் கொண்ட ஒருகும்பல் அந்த காரின்மீது கற்கள் போன்ற பொருட்களை வீசி எரிந்தன.
அந்த கார் நின்றதும் துப்பாக்கி முனையில் மிரட்டி உள்ளே இருந்தவர்களை அருகே இருந்த வயலுக்கு இழுத்து சென்றது அந்த கும்பல். அவர்களிடம் இருந்த பணம், நகைகள் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்ததுடன் ஆண்களை கட்டிப்போட்டுவிட்டு 14 வயது சிறுமி மற்றும் அவரது தாயாரை துப்பாக்கி முனையில் மாறி மாறி பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடியிருக்கிறது அக்கும்பல்.
பின்னர் கும்பலில் இருந்து தப்பிய ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
தற்போது இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 12 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைத்துள்ளனர்.