ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுத்து ஐ.ஏ.எஸ் அகாடமியில் தங்கிய கில்லாடி பெண்… திடுக் தகவல்
முசோரி: போலி டாக்டர் போலி போலீஸ் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் போலியான அடையாள அட்டையுடன் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பெண் ஒருவர் 6 மாத காலம் தங்கியிருந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.
ரூபி சவுத்ரி என்ற அந்த கில்லாடிப் பெண் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி பயிற்சி அகாடமியில், ஐ.ஏ.எஸ்.அதிகாரி என கூறிக்கொண்டு போலி அடையாள அட்டையுடன் 6 மாதங்கள் தங்கியிருந்தாக கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவர் பயிற்சி மைய ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முசாபர் நகரைச் சேர்ந்தவர், ரூபி சவுத்ரி. இவர் சிவில் சர்வீசஸ் தேர்வில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கும், லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக பயிற்சி மையத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி முதல், மார்ச் 27ஆம் தேதி வரை தங்கியிருந்தார். அவருக்கு, பயிற்சி மைய அதிகாரிகள், 'ஐ.ஏ.எஸ்., பயிற்சி அதிகாரி' என, போலி அடையாள அட்டை வழங்கி உள்ளனர். இதற்காக, ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரூபி சவுத்ரி, கடந்த, 27ஆம் தேதி பயிற்சி மையத்தை காலி செய்த பின், இந்த விவரம் நிர்வாகத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் எடுத்த நடவடிக்கையில், அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அடுத்த மாதம் அங்கு வருவதையொட்டி, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அகாடமியில் தங்கியுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பட்டியலை சரிபார்த்தனர். அப்போது தான் ரூபி ஐ.ஏ.எஸ். அதிகாரியே இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. தான் வைத்திருந்தது போலி அடையாள அட்டை என்பதை ஒப்புக்கொண்டுள்ள ரூபி, இவை அனைத்தும் அகாடமியில் உள்ள முக்கிய அதிகாரிக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
தனக்கு லைப்ரேரியன் வேலை வாங்கி தருவதாக கூறி அகாடமியின் துணை இயக்குனராக உள்ள சவுரப் ஜெயின் என்ற அந்த அதிகாரி 20 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக ரூபி குற்றம் சாட்டியுள்ளார்.
முதல் கட்டமாக, ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும். மீதமுள்ள பணத்தைக் கொடுப்பதற்காக, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பணம் கேட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பயிற்சி மைய அதிகாரிகள் கொடுத்த போலி அடையாள அட்டை உதவியுடன் தான், அங்கு ஆறு மாதங்களாக தங்கியிருந்ததாக கூறும் அவர் தன்னை மட்டும் தண்டிக்காமல் விசாரணையை நியாயமாக நடத்தி அனைவரையும் தண்டிக்கவேண்டும் என்றும் ரூபி வலியுறுத்தியுள்ளார்.
உயர் பாதுகாப்பு நிறைந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பயிற்சி மையத்தில், பெண் ஒருவர் போலி அடையாள அட்டையுடன் நீண்ட நாட்கள் தங்கியிருந்தது, பாதுகாப்பு குறைபாடு உட்பட, பல விதமான சர்ச்சைகளை எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications