பாகிஸ்தான் கடற்படையால் 12 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு!
போர்பந்தர்: அரபிக் கடலில் மீன் பிடித்த 12 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் நேற்று கைது செய்தனர். மீனவர்களின் 2 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டன.
அரபிக் கடலில் சர்வதேச கடல் எல்லைக்கு அருகே குஜராத் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 12 பேரை பாகிஸ்தான் கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்கள் கராச்சி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடலில் இருந்து திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். அவர்களது படகுகளையும் பாகிஸ்தான் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக குஜராத் கடற்படை அதிகாரி குல்தீப் சிங் தெரிவித்தார்.
அரபிக் கடல் வழியாக கடந்த 31-ந் தேதி நள்ளிரவில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் படகை இந்திய கடற்படையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த படகு வெடிவைத்து தகர்க்கப்பட்டது.
அதில் 4 பேர் இருந்ததாகவும், அவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கக் கூடும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்த சம்பவம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் படகு வெடித்துச் சிதறிய சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய கடல் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நடந்த அரபிக் கடல் பகுதியில் கடற்படை வீரர்கள் 173 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை துணை கண்காணிப்பாளர் பி.ஜே.நினாமா தெரிவித்துள்ளார்.