55 இந்திய மீனவர்களை கைது செய்தது பாகிஸ்தான்- 8 படகுகளையும் பறித்தது!
கட்ச்: எல்லையை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 55 பேரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. அவர்களது 8 படகுகளையும் பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது.
அரபிக்கடலில் இந்திய-பாகிஸ்தான் எல்லை சரியாக வரையறுக்கப்படவில்லை. இதனால் இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதும் பாகிஸ்தான் மீனவர்கள் இந்திய எல்லைக்குள் வந்து மீன்பிடிப்பதும் தொடர்கதை ஆகி வருகிறது.
இதனால் அவர்கள்மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானில் எல்லை தாண்டிச்சென்று மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மீனவர்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

கடந்த 27-ந் தேதியும் பாகிஸ்தான் கடற்படை, பாகிஸ்தானில் எல்லை தாண்டிச்சென்று மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் 27 பேரை கைது செய்தது. ஒருவாரத்திற்குள் 2வது முறையாக தற்போது 55 மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் பாகிஸ்தானை சேர்ந்த 37 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் இந்தியா விடுதலை செய்தது. இதேபோன்று பாகிஸ்தானும் 151 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது. அவர்களின் 57 மீன்பிடி படகுகளையும் விடுவித்தது.












Click it and Unblock the Notifications