காஷ்மீரில் 14 இடங்களில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: 2 பேர் காயம்
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் உள்ள 14 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா செக்டரில் எல்லையோரம் உள்ள 14 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய குடிமகன் ஒருவர் பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர். இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
நேற்று இரவு மட்டும் 14 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் அத்துமீறலால் எல்லையோர கிராமங்களில் உள்ள மக்கள் ஊரை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையோர கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் பாரதி என்பவர் கூறுகையில்,
பாகிஸ்தான் வேண்டும் என்றே எல்லையோர கிராமங்களை குறி வைத்து தாக்கி வருகிறது. அறுவடை மற்றும் பண்டிகை காலத்தில் தாக்குதல் நடத்தி மக்களிடையே பீதியை கிளப்புகிறது.
இது பற்றி மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில்,
நாம் சமாதானத்தை பற்றி பேசுகிறோம். ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதம் மூலம் பதில் அளிக்கிறது. சமாதானமும், தீவிரவாதமும் ஒன்றாக இருக்க முடியாது என்றார்.