பதான்கோட் ஹீரோ நிரஞ்சன் குடும்பத்துக்கு கேரள அரசு ரூ. 50 லட்சம் நிதியுதவி
பதான்கோட்: பதான்கோட் தாக்குதலில் உயிரிழந்த லெப்டினண்ட் கர்னல் நிரஞ்சனின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்திற்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதியின் உடலில் இருந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்கையில் குண்டு வெடித்து வெடிகுண்டு நிபுணர் குழுவின் தலைவரான தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் பலியானார்.
நிரஞ்சன் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எலம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆனால், பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். இதனால் முதலில் அவரது உடல் பெங்களூருக்கும், பின்னர் கேரளாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான மக்களின் அஞ்சலிக்குப் பின்னர் நிரஞ்சனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நிரஞ்சனின் குடும்பத்தாருக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்க இருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமின்றி நிரஞ்சனின் மனைவி டாக்டர் கே.ஜி. ராதிகாவுக்கும் அரசு பணி வழங்கவும், அவர்களது மகள் விஸ்மயாவின் கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளவும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.