லோக்சபா தேர்தலில் களமிறங்கும் மெகபூபா முப்தி! ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் போட்டி
ஸ்ரீநகர்: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் பிடிபி தலைவர் மெகபூபா முப்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
லோக்சபா தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் குறைவான நாட்களே இருக்கின்றன. எனவே, அரசியல் கட்சிகள் களத்தில் தங்களது செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக பாஜக இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் பாஜக வென்றுவிட்டால், நேருவுக்கு அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையை நரேந்திர மோடி பெறுவார்.

மட்டுமல்லாது பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழாவும் 2025ல் வருவதால் இதை சிறப்பாக கொண்டாட பாஜக ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே நாடு முழுவதும் 370 தொகுதிகளை குறி வைத்து பாஜக களத்தில் இறங்கியுள்ளது. மறுபுறம் பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் வகையில், மாநில கட்சிகளை இணைத்து இந்தியா கூட்டணி என்கிற பெயரில் தேர்தலை எதிர்கொள்கிறது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். எனவே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த தேர்தலில் ஜம்மு காஷ்மீர் பெரும் கவனம் பெற்றிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இது இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் விமர்சனங்களை கிளப்பியிருந்தது. இதனையடுத்து இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பல நாட்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த முறை மாநிலத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கும் 5 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
அதாவது, முதல் கட்டமாக உத்தம்பூரில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. அதன் பின்னர் ஜம்மு தொகுதிக்கு ஏப்.26ம் தேதியும், அனந்த்நாக் தொகுதியில் மே 7ம் தேதியும், ஸ்ரீநகர் தொகுதிக்கு மே 13ம் தேதியும் இறுதியாக பாரமுல்லா தொகுதிக்கு மே 20ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனவே, இந்த தேர்தலில் பாஜக அனைத்து தொகுதிகளிலும தோல்வியடையும் என்று மக்கள் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். பாஜக தவிர, காங்கிரஸ் , ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு (ஜேகேஎன்சி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு (ஜேகேபிசி), ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிபிஏபி) ஆகிய கட்சிகளும் களத்தில் இருக்கின்றன.
இதில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி அனந்த்நாக் தொகுதியிலும், கட்சியின் இளைஞர் அணித் தலைவர் வஹீத் பர்ரா ஸ்ரீநகரிலும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் மிர் ஃபயாஸ் பாரமுல்லாவிலும் போட்டியிடுகின்றனர்.
முப்திதான் ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதலமைச்சர். இவர் கடந்த 2016ல் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றினார். ஆனால், 2018ல் இவருக்கான ஆதரவை பாஜக திரும்ப பெற்றுக்கொண்டது. எனவே ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர்தான் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications