டிஜிட்டல் இந்தியாவிற்கு வந்த சோதனை.. பணம் இல்லாததால் ஏடிஎம்மை அடித்து உடைக்கும் பெங்களூர்வாசிகள்!
காசு இல்லை என்பதால் பெங்களூரில் நிறைய ஏடிஎம் மிஷின்கள் அடித்து உடைக்கப்பட்டு இருக்கிறது.
பெங்களூர்: காசு இல்லை என்பதால் பெங்களூரில் நிறைய ஏடிஎம் மிஷின்கள் அடித்து உடைக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த ஒரு வாரமாக இந்த சம்பவம் அடிக்கடி நடப்பதாக வங்கிகளுக்கு புகார்கள் வந்து இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் பெங்களூர் மட்டும் ஏடிஎம் விஷயத்தில் இன்னும் இயல்பு நிலையை அடையவில்லை.
மக்கள் அதிகம் இருக்கும் மெஜிஸ்டிக், ஜெயாநகர், சாந்திநகர், எலக்ட்ரானிக் சிட்டி, கோரமங்களா ஆகிய பகுதிகளில் இது போன்ற பிரச்சனைகள் நடக்கிறது. முக்கியமாக இரவு நேரத்தில் ஏடிஎம் மிஷின்கள் உடைக்கப்படுகிறது.
பெங்களூரில் அதிகம்
பணம் இல்லாத ஏடிஎம்கள் பெங்களூரில்தான் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக 2000 ரூபாய் நோட்டின் வருகைக்கு பின் மொத்தமாக 100 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்து இருக்கிறது. இதனால் ஏடிஎம்களில் 100 ரூபாய்கள் அதிகம் வைக்கப்படுவதில்லை. இதன் காரணமாக ஏடிஎம்மில் 2000 ரூபாய்க்கு குறைவாக பணம் எடுப்பவர்கள் கஷ்டப்படுகிறார்கள்.
என்ன செய்கிறார்கள்
ஏடிஎம் எடுக்கவில்லை என்றவுடன் மக்கள், மெஷினில் வேகமாக காலால் உதைக்கிறார்கள். இதனால் ஏடிஎம்மின் கீழ் பகுதி மிகவும் மோசமாக சேதம் அடைகிறது. அவர்கள் காலால் உதைக்கும் பகுதியில் தான் முக்கியமான பாகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி அடிக்கடி பெங்களூரில் நடக்கிறது.
எத்தனை ஏடிஎம்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படி 20 ஏடிஎம்கள் சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் சில ஏடிஎம்களில் மின்னனு திரையும் உடைக்கப்பட்டு உள்ளது. நிறைய எஸ்பிஐ ஏடிஎம்கள் உடைக்கப்பட்டு இருப்பதாக ஆர்பிஐ தெரிவித்து இருக்கிறது. இதை கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.
அதிகாரிகள் புலம்பல்
பெரும்பாலும் இந்த சம்பவம் இரவில்தான் நடக்கிறது என்று அதிகாரிகள் புலம்பி இருக்கிறார்கள். பெண்கள் கூட இப்படி காலால் ஏடிஎம்மை அடித்து உடைப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் ஏடிஎம் மிஷனை உடைப்பது அங்கு இருக்கும் கேமராக்களில் பதிவாகி இருக்கிறது.