மானியமில்லா சிலிண்டரைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் குறைப்பு.. நள்ளிரவு முதல் அமல்
டெல்லி : மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையையும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக குறைத்துள்ளன.
மானியம் அல்லாத சிலிண்டர் விலை ரூ.23.50 குறைக்கப்பட்டு, ரூ.608.50 க்கு விற்பனையான மானியம் அல்லாத சிலிண்டர் இனி ரூ.585 ரூபாய்க்கு விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு (31-07-2015) முதல் அமலாகிறது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையையும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக குறைத்துள்ளன.
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.43 ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.60 ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பும் இன்று நள்ளிரவு (31-07-2015) முதல் அமலுக்கு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளதாலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சீரடைந்துள்ளதாலும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விலைக் குறைப்பையடுத்து, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு வரிகளைப் பொருத்து ரூ.2.82 குறைந்து ரூ.64.47 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4.96 குறைந்து 46.12 க்கும் விற்பனையாகும்.