ஆன்லைன் ஷாப்பிங் ஆபத்தானது.. உடைத்து ஆதங்கமாக பேசிய பியூஷ் கோயல்.. தடதடக்கும் அமேசான், பிளிப்கார்ட்
டெல்லி: இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் அடைந்துவரும் விஸ்வரூப வளர்ச்சி ஒரு சாதனை என்பதை விட "கவலைக்குரிய விஷயம்" என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 'இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் நுகர்வோர் நலனில் இ-காமர்ஸ் தாக்கம்' குறித்த அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் பேசிய கோயல் இவ்வாறு தெரிவித்தார். அமேசான், பிளிப்கார்ட் எழுச்சி பெறத் தொடங்கியதையடுத்து, வணிகர் சங்கங்கள் காலம் காலமாக இவ்வாறு ஆதங்கம் தெரிவித்துவரும் நிலையில் பியூஸ் கோயல் அதே டோனில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்க நகர்வாக பார்க்கப்படுகிறது.

"இ-காமர்ஸின் இந்த மகத்தான வளர்ச்சியால் நாம் மிகப்பெரிய, சமூக சீர்குலைவை ஏற்படுத்தப் போகிறோமா? இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சந்தையில் பாதி ஈ-காமர்ஸ் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக மாறும் என்பதை நான் பெருமையாகப் பார்க்கவில்லை. கவலைக்குரிய விஷயம்" என்று கோயல் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் உள்ளூர் கடைகள் போன்ற பாரம்பரிய சில்லறை வணிகத் துறைகளில் மின்-வணிகத்தின் விளைவுகள் பற்றி தொடர்ந்து மதிப்பிட வேண்டியது அவசியம் என்று கோயம் வலியுறுத்தினார். மக்கள் தொகையில் ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே தற்போது உணவு மற்றும் மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்தியாவில் இ-காமர்ஸ் வேகமாக விரிவடைந்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆன்லைன் ஷாப்பிங் மக்களிடையே மோசமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்தார். ஆன்லைன் ஷாப்பிங்கின் வசதியும், OTT தளங்களின் ஆதிக்கமும் இணைந்து, மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க ஊக்குவிக்கும், இதனால் சமூக தொடர்புகள் குறையும். ஆன்லைனில் சாப்பிட்டபடியே ஓடிடியில் படம் பார்ப்பது ஆபத்தான போக்கு. இப்படியே போனால் வீட்டுக்குள்ளேயே முடங்கும் மக்களை கொண்ட நாடாக மாறிவிடுவோம்.உணவருந்துதல் அல்லது காபி அருந்துவதற்காக நண்பர்களைச் சந்திப்பது போன்ற நடவடிக்கைகள் மனித வளர்ச்சிக்கு முக்கியமானவை என்றும், அதிகமான மக்கள் தங்கள் தேவைகளுக்காக ஆன்லைன் தீர்வுகளுக்குத் திரும்புவதால், மக்களிடையே தொடர்பு துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கோயல் மேலும் தெரிவித்தார்.

சில இ-காமர்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்தும் விலை நிர்ணய உத்திகள் குறித்தும் அமைச்சர் கவலை தெரிவித்தார். இதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றார் அவர்.
"இந்தியாவில் ஒரு பில்லியன் டாலர்களை முதலீடு செய்யப் போகிறோம் என்று அமேசான் கூறும்போது, நாம் ஆஹா ஓஹோ என அதை நினைத்து கொண்டாடுகிறோம், இந்த பில்லியன் டாலர்கள் இந்தியப் பொருளாதாரத்தை வளர்க்க எந்தவொரு பெரிய சேவைக்காகவோ அல்லது முதலீட்டிற்காகவோ வரவில்லை என்ற அடிப்படை விஷயத்தை நாம் மறந்து விடுகிறோம்.
இந்தியாவில் ஆன்லைன் நிறுவனங்கள், 15.8 மில்லியன் வேலைகளை உருவாக்கியுள்ளனர், இதில் பெண்களுக்கு 3.5 மில்லியன் வேலைகள் கிடைத்துள்ளன, சுமார் 1.76 மில்லியன் சில்லறை வணிக நிறுவனங்கள் இ-காமர்ஸ் செயல்பாட்டில் பங்கேற்கின்றன. இது சாதகமான அம்சங்கள் என்ற போதிலும் பியூஸ் கோயல் வருங்காலத்தில் நிலைமை எப்படி மாறுமோ என்ற அச்சத்தை தனது பேச்சியில் வெளிப்படுத்தியுள்ளார்.
சிறிய வர்த்தகர்கள் மற்றும் பெரிய சில்லறை விற்பனையாளர்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. இப்போது பஜாரில் எத்தனை மொபைல் கடைகளைப் பார்க்கிறீர்கள்? 10 ஆண்டுகளுக்கு முன்பு எத்தனை மொபைல் கடைகள் இருந்தன? அந்த மொபைல் ஸ்டோர்கள் இப்போது எங்கே? ஆப்பிள் அல்லது பெரிய சில்லறை விற்பனை கடைகளில் மட்டுமே மொபைல் போன்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் விற்கப்படுமா? சிறிய முதலீட்டாளர்கள் தொழில் செய்ய முடியாதா என்றும் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications